முருங்கைக் கீரை


வ்வொரு செயலிலும் பூரணத்துவம் வேண்டும். பக்தியிலும் பூரணத்துவம் இருந்தால்தான் இறைநிலை இன்பம் சாத்தியமாகும். "மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை' என்பர் ஞானிகள். மனம் செம்மையானால்தான் பூரணத்துவம் சாத்தியமாகும்.


ஒருவன் பூரணத்துவம் பெற்றுவிட்டால் அவனுக்கு அகந்தை, ஆணவம் எதுவும் இருப்பதில்லை. அவன் செயல்பாடுகள் தெளிந்த நீரோடையாய் சமூக மேன்மைக்குப் பயன்படும். தியானம் ஒன்றே முழுமைக்கான வழியும் வாசலுமாகும். வெறும் பக்தியுடன் நின்றுவிடாமல், மிக்க சிரத்தையுடன் நம்முள் ஜீவனாய் ஜீவித்திருக்கும் அந்த சிவபெருமானை நித்தமும் தியானித்து பிறவிப் பெரும்பயனைப் பெற முனைவோம்.

சித்த மருத்துவத்தின் முதல் சித்தனாம் அந்த சிவனின் அருள்பெற்ற மூலிகைகளைச் சரணடைந்து, சிவலயம் பெற முயல்வோம். சிவாம்சம் பொருந்திய- அனைத்து நற்பலன்களையும் தன்னகத்தே பெற்றுள்ள முருங்கையைப் பூரணமாய் சரணடைவோம். முருங்கையின் நற்பலனால் நல்தேகம் பெற்று நலமுடன் வாழ முனைவோம்...

முருங்கையைப்போல் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கும் இல்லை எனலாம். இதை சர்வரோக நிவாரணி என்று சொன்னால் மிகையல்ல. இந்தக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துகளும் வைட்டமின்களும் அபரிமிதமாக உள்ளன. உடல் பலவீனம், கருப்பைக் கோளாறுகள், எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான நோய்களை முழுமையாகக் குணப்படுத்தக்கூடியது முருங்கை.

மூட்டுவலிகள் குணமாக...

முருங்கைக் கீரையோடு சிறி

து மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் மட்டும் சேர்த்து வேகவைத்து தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலிகள் அதிசயமாய் குணமாகும்.


முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவற்றை உலர்த்தி வகைக்கு 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மிளகு, சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து ஒன்றாக அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் அரைத் தேக்கரண்டி அளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலிகள் முழுமையாய் குணமாகும்.

ரத்த அழுத்தம் சீராக...

முருங்கைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, பின் அதை உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை- மாலை இருவேளையும் அரைத் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

இதய நோய்கள் விலக...

சீரகம், சோம்பு, ஓமம், தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து, கால் லிட்டர் முருங்கைக் கீரை சாற்றில் அனைத்தையும் ஊறவைத்து உலர்த்தவும். பின்னர் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இதயம் சார்ந்த அனைத்து நோய்களும் விலகும்.

கபநோய்கள் விலக...

முருங்கைக் கீரை சாற்றில் மிளகு, அதிமதுரம் இரண்டையும் தேவையான அளவில் ஊறவைத்து, பின் உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கபநோய்கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.

சிறுநீர் நோய்கள் விலக...

ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரையை எடுத்துக்கொண்டு, அத்துடன் 20 கிராம் பார்லி, கால் தேக்கரண்டி சீரகம், சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாய் பிரியும். மேலும் சிறுநீர் நோய்கள் அனைத்தும் விலகும்.

மாதவிலக்கு கோளாறுகள் மறைய...

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து, அத்துடன் அரை தேக்கரண்டி கறுப்பு எள், கால் தேக்கரண்டி கருஞ்சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயமாக்கி, காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிடாய் முறைப்படும். மேலும் ரத்த உற்பத்தி உண்டாகி, மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தும் முறையாயத் தீரும்.

ரத்த சோகை மறைய...


கைப்பிடியளவு முருங்கைக் கீரையுடன் ஒரு பல் பூண்டு, பத்து மிளகு, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை முழுமையாகக் குணமாகும். இதனை காலை உணவுக்குப் பின்னரே சாப்பிட வேண்டும். ஒருசிலருக்கு வயிற்றுக் கழிச்சல் உண்டாகலாம். அவர்கள் தங்களது செரிமான திறனுக்கு ஏற்ப உட்கொள்ள வேண்டும்.

கண்நோய்கள் விலக...
ஒரு கைப்பிடியளவு முருங்கைக் கீரை, ஒரு கைப்பிடியளவு பொன்னாங்கண்ணிக் கீரை- இரண்டையும் நீர்விடாமல் அவித்து, சூடு ஆறியபின் கண்களில் வைத்துக் கட்டி வரவேண்டும். தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் கண் ரோகங்கள் அனைத்தும் விலகும். இதேபோல் முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு தணியும். பொடுகுப் பிரச்சினையும் தீரும்.

பாலுணர்வு மேம்பட...
100 கிராம் ஜாதிக்காய் வாங்கி ஒன்றிரண்டாய் உடைத்துக்கொள்ளவும். பின்னர் அதை 250 மி.லி. முருங்கைக் கீரை சாற்றில் ஊற வைத்து உலர்த்தி தூள் செய்துகொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் பாலுணர்வு மேம்பட்டு, கலவிச்சுகம் கிடைக்கும்.

முருங்கைக் கீரை கஞ்சி மாவு


இரண்டு கிலோ அளவு முருங்கைக் கீரையில் நீர் சேர்த்து விழுதாய் துவையல்போல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த விழுதுடன் இரண்டு கிலோ பச்சரிசி கொட்டிக் கிளறவும். இதனை இரண்டு நாட்கள் நிழலில் காயவைத்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் அரை கிலோ சிறுபருப்பை லேசாக வறுத்து சேர்க்கவும். மிளகு, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றையும் மேற்கண்டவற்றுடன் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.


இதில் தேவையான அளவுப் பொடியை எடுத்து நீரில் கலந்து கஞ்சியாகச் செய்து சாப்பிடலாம். அல்லது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அடையாகச் செய்தும் சாப்பிடலாம். பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக்கு இது அற்புத உணவாகும். அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாக உண்டாகும் இடுப்பு வலி முழுமையாக குணமடைய, இந்த கஞ்சி மாவை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டால் போதும்; பலன் நிச்சயம் உண்டாகும்.

முருங்கை பல்வேறு புலவர்களாலும் பாடப் பெற்ற பெருமைக்கு உரியது. முருங்கையின் பூக்கள் கடுங்காற்றில் அடிபட்டு உதிர்வதை, கடல் அலைகளின் நீர்த்துளிகள் சிதறுவதைப்போல இருப்பதாக அகநானூற்றுப் பாடலில் மாமூலனார் என்னும் புலவர் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.
மருத்துவ குணங்களைத் தன்னுள் ஏராளமாய் பெற்றுள்ள முருங்கை பாம்பணி சிக்குருபுரம் சிவன் கோவிலில் தலவிருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது.

சிவனின் சாரம் முருங்கையில் உள்ளது. முருங்கையைச் சார்ந்து வாழ முனைவோம்.