கல்வி


SSLC தேர்வு:  மாணவியர் குறைவு / மாணவர்கள் அதிகம் 

மார்ச் 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்; மாணவியர், 1,554 பேர்.

முந்தைய பொதுத் தேர்வை, 10 லட்சத்து, 50 ஆயிரத்து, 922 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 5 லட்சத்து 43 ஆயிரத்து, 152 பேர்; மாணவியர், 5 லட்சத்து, 25 ஆயிரத்து 686 பேர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 11,344 பள்ளிகளில் இருந்து, 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வை, தனித்தேர்வாக, 53,120 பேர் எழுதுகின்றனர். இவர்களையும் சேர்த்தால், மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை, 11.21 லட்சமாக உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 5 லட்சத்து, 26 ஆயிரத்து, 790 மாணவர், தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு, 5 லட்சத்து, 43 ஆயிரத்து 152 பேர் பங்கேற்கின்றனர். 5 லட்சத்து, 24 ஆயிரத்து 132 மாணவியர், முந்தைய தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மட்டுமே எழுதுகின்றனர்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1,554 பேர் மட்டுமே, இந்த ஆண்டு கூடுதலாக எழுதுகின்றனர். ஆரம்ப வகுப்புகளில், மாணவியர் அதிகளவில் பள்ளிகளில் சேர்கிற போதும், அவர்கள் அனைவரும், 10ம் வகுப்பு வரை, பிளஸ் 2 வரை தொடர்கின்றனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கிராமப்புறங்களில், அதிகமான மாணவியர், படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை உள்ளது. இதன் காரணமாகவே, மாணவியர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. பெண் கல்விக்காகவும், இடைநிற்றலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அப்படியிருந்தும், மாணவியர் எண்ணிக்கை சரிந்திருப்பது, கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

============================================
வேலை வாய்ப்புக்கும்,கல்விக்கும் இத்தாலி

உலக அளவில் பல நாடுகளும் சிறப்பான கல்வியை அளித்தாலும், படித்து முடித்தவுடன் அதே நாட்டில் வேலை பார்ப்பது சற்று கடினமானது. ஆனால் சிறந்த பாடத்திட்டங்களோடு வேலை வாய்ப்புக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், இத்தாலி இந்திய மாணவர்களுக்கு பிடித்த நாடாக உள்ளது.

இத்தாலியின் மக்கள் தொகை அடிப்படையில், அங்கே பல பணிகளுக்கு ஆட்தேவை உள்ளதால், இளைஞர்கள் பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அதற்கேற்றவாறு அங்கு பாடத்திட்டங்களும், விசா நடைமுறைகளும் எளிதாக உள்ளது. இத்தாலியின் பல பல்கலைக்கழகங்கள் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கின்றன. சர்வதேச மாணவர்களுக்காக இத்தாலிய மொழி பல்கலைக்கழக வளாகங்களில் சொல்லித்தரப்படுகின்றன.

படிப்புகள்

இத்தாலியில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகமாக ஃபேஷன் படிப்புகளையும், மேலாண்மை படிப்புகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இளநிலை படிப்புகள் மூன்று வருடமும், முதுநிலை படிப்புகள் ஒரு வருடமும் அளிக்கப்படுகிறது.

மேலாண்மை படிப்புகளை படிப்பதற்கு ஜிமேட் தேர்வில் 680 - 700 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

பல நிறுவனங்கள் வளாகத்தேர்வின் மூலம் மாணவர்களை வேலைக்கு அழைத்துச்செல்கிறது.

கல்விச்செலவு

வருடத்திற்கு 8,000 யூரோ முதல் 15, 000 யூரோ வரை படிப்புகளுக்கு ஏற்றவாறு செலவுகள் அமையும்.

மேலும் தகவல்களுக்கு www.study-in-italy.it என்ற இணையதளத்தை காணவும்


==========================================

வெளிநாட்டு படிப்பு 


வெளிநாட்டில் படிப்பு - யோசிக்க வேண்டியவை

வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.
நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு  குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.
ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.

உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!