சினிமா


4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருக்கிறது "லைஃப் ஆஃப் பை". ஹாலிவுட் படம் என்றாலும் இந்திய நட்சத்திரங்கள் நடித்து இந்தியாவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் நமக்கு கூடுதல் சந்தோஷம். அதிலும் நம் சென்னை பொண்ணு ஷரவந்தியும் அந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்னும் சந்தோஷம். ஆஸ்கார் விருது அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நேரம் தன் தோழிகளுக்கு இனிப்புகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஷரவந்தி. அந்த மகிழ்ச்சியின் இடையில் அளித்த பேட்டி:


* நீங்க நடிச்ச படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைச்சிருக்கு எப்படி உணர்றீங்க ஷரவந்தி?

படத்துல நடிக்கும்போது இந்தப் படத்துக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும்னு எல்லோருமே பேசிக்கிட்டாங்க. அந்த அளவுக்கு அந்தப் படத்துக்காக எல்லோரும் கஷ்டப்பட்டு உழைச்சாங்க. நான்கு விருகள் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. விளையாட்டு போட்டியில என்னோட டீம் ஜெயிச்சமாதிரி இருக்கு. நான் நடிச்ச முதல் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பு கோடியில ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். சந்தோஷத்துல மிதந்துக்கிட்டிருக்கேன்.

* எப்படி கிடைச்சுது இந்த வாய்ப்பு?

அது பெரிய கதைங்க. நான் அஞ்சு வயசுலேருந்தே அண்ணா நகர்ல உள்ள ஒரு நாட்டியாலயாவில் டான்ஸ் படிச்சிட்டிருக்கேன். லைப் ஆப் பை படத்துக்கு நல்லா டான்ஸ் ஆடத் தெரிஞ்ச 14 வயசுப் பொண்ண தேடியிருக்காங்க. சென்னையில உள்ள எல்லா டான்ஸ் ஸ்கூல்லேயும ஆடிசன் பண்ணியிருக்காங்க. எதுவுமே செட்டாகல அவங்களுக்கு. எங்க ஸ்கூல்ல அப்ரோச் பண்ணியிருக்காங்க. அவுங்க எங்க ஸ்கூல்ல யாருக்கும் சினிமால நடிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் ஒருவழியா சம்மதிச்சு என்னோட போட்டோவையும், இன்னொரு மாணவியோட போட்டோவையும் கொடுத்திருக்காங்க. அதுல என்னை மட்டும் மேக்-அப் டெஸ்ட்டுக்காக தைவான் கூப்பிட்டாங்க. நானும் உடனே புறப்பட்டு போனேன். அங்கு மேக்-அப் டெஸ்ட் நடந்துச்சு. எல்லாம் முடிஞ்ச பிறகு நீங்க நாட்டுக்கு திரும்பிப்போங்க செலக்ட் ஆனா சொல்றோம்னு அனுப்பினாங்க. எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு. ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினேன். ஏர்போட்டுல  இறங்கி வெளியில வந்த உடனேயே தைவான்லேருந்து போன் "நீங்க செலக்ட் ஆயிட்டீங்க"ன்னு.

* அப்பா அம்மா பற்றி...?

அம்மாவுக்கு பூர்வீகம் திருநெல்வேலி, பி.எஸ்.என்ல ஆபீசரா இருக்காங்க, அப்பாவோட பூர்வீகம் கிருஷ்ணகிரி பிசினஸ்மேனா இருக்கார். நான் பொறந்தது கிருஷ்ணகிரியில படிச்சது வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். சோ...நான் பக்கா அக்மார்க் தமிழ் பொண்ணு. 

* சினிமா அனுபவம் எப்படி இருந்திச்சு?


ஹாலிவுட் சினிமாக்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆனா அதில் நடிப்பேன்ங்றது கொஞ்சமும் எதிர்பார்க்கல. சினிமா பற்றி நிறைய கத்துக்கிட்டேன். நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க. நடிப்பு மட்டுமல்ல சினிமா டெக்னிக்கையும் கத்துக்க முடிஞ்சுது.

* இயக்குனர் ஆங் லீ பற்றி...?

எனக்கு குரு மாதிரி. ஆரம்பத்துல எனக்கு இருந்த பயத்தைப் போக்கி நடிக்க வச்சார். இந்திய பெண்களோட மேனரிசத்தை  அணுஅணுவாக தெரிந்து வைத்திருந்தார். அதை அப்படியே என்கிட்ட வாங்கினார். எத்தனை டேக் போனாலும் சிரிச்சுக்கிட்டே அடுத்த டேக்குக்கு தயாராயிடுவார். நேரம் தவறாமை, சுறுசுறுப்பு, ஹார்ட் ஒர்க், டெடிக்கேஷன் எல்லாத்தையும் அவர்கிட்ட கத்துக்கிட்டேன்.

* ஹாலிவுட் படத்தில் நடிக்க எப்படி துணிச்சல் வந்தது?


ஆரம்பத்துல பயமாத்தான் இருந்திச்சு. ஹாலிவுட் படம்னாலே முத்தக்காட்சி அதுஇதுன்னு தான் கற்பனை ஓடிச்சி. ஆனா பக்கா பாண்டிச்சேரி பரதநாட்டிய பொண்ணு கேரக்டர்னு தெரிஞ்ச பிறகுதான் தைரியம் வந்து நடிக்கவே ஒப்புக்கிட்டேன். என்னோட காட்சிகளை மட்டும் பார்த்தா தமிழ் படம் மாதிரிதான் இருக்கும்.

* தொடர்ந்து நடிப்பீங்களா?


இப்போ நான் பிளஸ்-2 படிச்சிட்டிருக்கேன். எக்ஸாமுக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கு. இரவு பகலா படிச்சிட்டிருக்கேன். பிளஸ்-2 முடிச்சிட்டு நல்ல வாய்ப்பு வந்தா நடிப்பேன். இல்லேன்னா டிகிரி பண்ணுவேன்.

* எந்த மாதிரி கேரக்டர்களை எதிர்பார்க்குறீங்க?

கிளாமரு, டூயட்டுன்னு இல்லாம நல்லா நடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குற கனமான கேரக்டரா இருந்தா நடிப்பேன். நாட்டியம் சம்பந்தமான படமா இருந்தா டபுள் சந்தோஷம்.இவ்வாறு அவர் கூறினார்.

====================================மீண்டும் மவுசு:லைப் ஆஃப் பைக்கு 



"லைப் ஆஃப் பை" படம் தமிழ்நாட்டில் தமிழிலும் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் இந்திய அளவில் அந்தப் படம் 91 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 7.25 கோடி வசூலித்துள்ளது. 3டி படம் என்பதால் மால் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணத்துக்கு பயந்தே மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. இருந்தாலும் சென்னையில் எஸ்கேப் தியேட்டரில் மட்டும் பகல் காட்சியாக ஒரு ஷோ மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது 4 ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பதால் படத்தை பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் திரையிட இருக்கிறார்கள். தமிழ் டப்பிங் வெர்சனை சாதாரண தியேட்டர்களில் குறைந்த கட்டணதில் பார்க்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதே போல ஆஸ்கார் விருது பெற்ற அர்கோ, லிங்கன் படங்களும் மீண்டும் திரையிடப்படுகிறது.

================================




கோச்சடையான்  ரஜினி பெருமிதம்!

சூப்பர் ஸ்டாரின் மகள் சவுந்தர்யா இயக்கும் படம் கோச்சடையான். மோசன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனமும், ஒன் குளோபல் எண்டர்டயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதி உள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி லண்டன் பைன்வுட் ஸ்டூடியோவில் தொடங்கியது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. தற்போது சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து, கிராபிக்ஸ், மிக்சிங், டப்பிங் பணிகள் லண்டனிலும், சென்னையிலும் நடந்து வருகிறது.

இதுவரையில் தயாரான (டபுள் பாசிட்டிவ்) கோச்சடையான் படத்தை நேற்று சவுந்தர்யாவின் ஸ்டூடியோவில் ரஜினி பார்த்தார். அவருடன் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், மாதேஷ், ரமேஷ் கண்ணா, சவுந்தர்யா ஆகியோரும் பார்த்தார்கள். சுமார் 3 மணிநேரம் ஓடிய படத்தை ரஜினி கைதட்டி ஆரவாரத்துடன் பார்த்தார். அடிக்கடி மகளின் கைகளை குலுக்கி "சூப்பர் சூப்பர்" என்று பாராட்டினார்.

படம் முடிந்ததும் ரஜினி கூறியதாவது: என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும், படம் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது. சவுந்தர்யாவும், கே.எஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும். என்றார். "படம் நான் எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது" என்றார் கே.எஸ்.ரவிகுமார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து கோச்சடையான் தீபாவளிக்கு வருகிறது.

==========================


விஜய்க்காக புதுமாதிரியான கதையை தயார் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான படம் துப்பாக்கி. இநத படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, விஜய்யின் கேரியரிலும் மாறுபட்ட படமாகவும் அமைந்தது. அதனால் இனி தான் நடிக்கிற ஒவ்வொரு படமும் அந்த அளவுக்கு பிரமாண்டமான படங்களாகவும், பெரிய வசூலை ஈட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே புதிய படங்களை கமிட் பண்ணுகிறார் விஜய். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் தலைவா படமும் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அதோடு, படத்தை இந்தியில் வெளியிடும் நோக்கத்தில் பாலிவுட் நடிகை ராகினியையும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க இருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இந்தியில் துப்பாக்கியை இயக்கி வரும் நான், அடுத்த படத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்குகிறேன். ஆனால் அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது. இதுவரை விஜய் நடிக்காத புதுமையான கதையாகவும், இதுவரை விஜய்யை பார்த்திராத கோணத்தில் ரசிகர்கள் பார்க்கும் மாதிரியான புது மாதிரியான படமாகவும் அது இருக்கும் என்று சொல்லும் முருகதாஸ், அப்படத்தில் பல ஹாலிவுட் டெக்னீசியன்களும் இடம்பெறுவார்கள் என்கிறார்.

==========================

அதர்வா உற்சாகம்

"பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, பாலாவின் இயக்கத்தில் நடித்துள்ள, "பரதேசி படத்துக்காக, கடின உழைப்பை விதைத்து விட்டு, அறுவடைக்காக காத்திருக்கிறார். அதோடு, "இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்த பின்பே, அடுத்து எந்த மாதிரி கதைகளில் நடிக்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன் என்று கூறி, புதுப்பட வாய்ப்புகளை கூட, நிலுவையில் வைத்துள்ளார், அதர்வா. இந்நிலையில், "பரதேசி படம், சப்-டைட்டிலோடு, வடமாநிலங்களிலும், வெளியாகவுள்ளதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார், அதர்வா.
========================

"தலைவா படத்தில் இந்தி நடிகை ராகிணி

விஜயின் "தலைவா படத்தில், ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த, பிரபல நட்சத்திரங்கள் நடிக்கப் போவதாக, முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், "இதெல்லாம், வெறும் வதந்தி என, பின், தெரியவந்தது. லேட்டஸ்ட்டாக கிடைத்துள்ள தகவலின்படி, "டேராடூன் டைரி என்ற இந்தி படத்தில் நடித்த, ராகிணி நந்த்வானி என்ற நடிகை, "தலைவா படத்தில் நடிக்கவுள்ளாராம். இதில், இவருக்கு கதாநாயகி வேடம் இல்லையென்றாலும், முக்கிய கேரக்டராம். இவர் தொடர்பான, படப் பிடிப்பு முழுவதையும், மும்பையிலேயே படமாக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்துக்கு பின், தமிழில் முழு கவனம் செலுத்தவும், ராகிணி திட்டமிட்டுள்ளாராம் .

==============================

பவர்ஸ்டார் குத்துப்பாட்டு நடிகைகளை ஓரங்கட்டுகிறார் !

லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், சந்தானம் மாதிரி இல்லாமல் தான் ஒரு கதாநாயகனாகவே சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தார். அதற்கான முயற்சிகளைதான் அடுத்தடுத்து எடுப்பதாகவும இருந்தார். ஆனால் ஐ படத்துக்கு ஒரு ரோபோ வேடத்தில் நடிக்க அவரை ஷங்கர் அழைத்ததைப்பார்த்து, பல கம்பெனிகள் காமெடி மற்றும் குத்துப்பாடல்களுக்கு ஆடுவதற்கு பவர்ஸ்டாரை தொடர்பு கொண்டன. அதனால் நாம் விரும்புகிறதைவிட மற்றவர்கள் தன்னை எந்த மாதிரி விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று தேடிவந்த வாய்ப்புகளை பயன்படுத்தத் தொடங்கினார் பவர்.

அந்த வகையில் தற்போது யா யா உள்பட சில படங்களில் காமெடியனாக நடிக்கும் பவர், ஒன்பதுல குரு, அழகன் அழகி உள்பட பல படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடி வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களிலும் ஆட ஒப்புதல் அளித்திருக்கிறார்.அவர் ஒரு பாட்டுக்கு வந்து தலைகாட்டினால் போதும் படத்தை வியாபாரம் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த அளவுக்கு படங்களின் வியாபாரத்தை நிர்ணயிக்கிற நடிகராக தற்போது முன்னிலை வகிக்கிறார் பவர்ஸ்டார்.




இருப்பினும், எல்லாம் சரிதான், ஆனால், உங்களை குத்து நடிகைகள் ரேஞ்சுக்கு ஆக்கி விட்டார்கள் என்று சிலர் பவரை கிண்டி விடுகிறார்கள். அதற்கு அவர் சொல்லும் பதில், இதுகூட ஒரே ட்ரண்டுதானே. சினிமாவில் இதுவரை குத்துப்பாட்டு நடிகைகள்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் நான் வந்தபிறகுதான் குத்துப்பாட்டு நடிகர் என்று ஒரு கேட்டகிரியே உருவாகியிருக்கிறது. ஆக, இந்த பவர் எதை செஞ்சாலும் அதுல ஒது புதுமை இயக்கனும்னு நெனைக்கிறவன். அதத்தான் இப்ப செய்துக்கிட்டிருக்கேன் என்று தன்னை சீண்டி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார் குத்தாட்ட நடிகர் பவர்ஸ்டார்.

====================================
50 லட்சம் ரசிகர்களால் 50 லட்சம் சம்பளம்! ’பவர்’ கொடுத்த ’ஷாக்’!



தமிழ் சினிமாவில் இதுபோன்ற தருணத்தை யாராவது எதிர்பார்த்திருப்பார்களா? என்றால் ’இல்லை’ என்பதே கோரஸாக வரும் பதில். ஒரு சமயத்தில் பவர்ஸ்டார் என்பவர் டாக்டராக இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தவர். தானே தயாரித்து ‘லத்திகா’ என்ற படத்தில் நடித்தும் முடித்தார். ரிலீஸானதே யாருக்கும் தெரியாததால் ஒரு தியேட்டரை பல மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்து 250 நாள் ஓட்டினார்.
பணம் இருக்கும் திமிரு, ஆர்வக்கோளாரு என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்ட பவர்ஸ்டார் இன்று பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரம்(இது அவரே எதிர்பார்க்காதது என்ற உண்மை ஒருபுறம் இருக்கட்டும்). பவர்ஸ்டார், சந்தானம், சேது நடித்து வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் பவர்ஸ்டார் தமிழ்த் திரையுலகின் மறைக்கமுடியாத ஸ்டாராக மாறிவிட்டார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பலராலும் பேசப்படுவது பவர்ஸ்டார், சந்தானம் கூட்டணி தான்.
இந்த கூட்டணி மேலும் மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பேசப்படும் கூட்டணியாக மாற வேண்டும் என்ற கணக்கில் சந்தானம் புக் ஆகும் படங்களிலெல்லாம் பவர்ஸ்டாரையும் புக் செய்கிறார்களாம். இந்த முயற்சி யாருக்கு நல்லதோ இல்லையோ பவர்ஸ்டாருக்கு அடித்திருக்கிறது லக். ஐ.ராஜராஜன் இயக்கத்தில் சந்தானம், மிர்சி சிவா, பவர்ஸ்டார் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் ‘யா யா’. கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தானத்திடம், பவர்ஸ்டாரிடமும் பேசச் சொன்னபோது ”சம்பளமெல்லாம் நீங்களே பேசிக்கொள்ளுங்கள்” என்று பெரிய பேனர் வீட்டை சந்தானம் கைகாட்டி விட்டாராம்.
தயாரிப்பாளார் தரப்பில் சென்று பவர்ஸ்டாரிடம் கேட்ட போது ’ஒரு 50 லட்சம் கொடுத்தா நடிச்சிடலாம்’ என்று சொல்லி ஷாக் அடிக்க வைத்துவிட்டாராம் பவர்ஸ்டார். 50 லட்சம் ரசிகர்கள் இருக்கும் நடிகனுக்கு 50 லட்சம் சம்பளம் கொடுப்பது தவறா சார்? என்ற கேள்வியில் அதிர்ந்து வேறு வழி இல்லை என்று ஓகே சொல்லிவிட்டு வந்துவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பும். ஒரு காலத்தில் காசு கொடுத்து நடித்த நிலை போய் இப்போது காசு வாங்கி நடிக்கும் நிலைக்கு வந்திருக்கும் பவர்ஸ்டார் சம்பாதிக்க வேண்டாமா?
ஒரு சமயத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் கலாய்த்து அனுப்பிய டி.வி சேனல்கள் இப்போது பவர்ஸ்டாரிடம் பேட்டி கேட்டு காத்துக்கிடக்கிறார்களாம். பவர்ஸ்டாரின் பெயருக்கு இப்போது தான் உண்மையான அர்த்தம் உண்டாகியிருக்கிறது என்று தங்கள் மகிழிச்சியை வெளிப்படுத்துகின்றனர் பவர்ஸ்டாரின் 50 லட்சம்! ரசிகர்களில் சிலர். பவர்ஸ்டாருக்கே அரை கோடி என்றால் சந்தானத்தின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று கற்பனையை தூண்டிவிட வேண்டிய அவசியமே இல்லை.
இப்படத்தில் நடிக்க சந்தானத்தின் 35 நாள் கால்ஷீட்டிற்கு சம்பளம் வெறும் இரண்டு கோடி ரூபாய் தானாம். ஐ.ராஜராஜன் சிவா மன்சுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் இயக்குனர் ராஜேஷிடம் அசிஸ்டண்டாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




ABCD





இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர், நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"

கதைப்படி பிரபுதேவாவும், அவரது நண்பர் கே.கே.மேனனும் மும்பையில் பிரபலமான நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் பிரபுதேவாவுக்கும், நண்பர் கே.கே.வுக்குமிடையே ஈ‌கோ யுத்தம் கிளம்ப, அதனால் அங்கிருந்து கிளம்பும் பிரபுதேவா, தனது மற்றொரு நடன நண்பர் கணேஷ் ஆச்சார்யாவின் குடியிருப்புக்கு குடிபெயர்கிறார். கணேஷ் ஆச்சார்யாவும், கே.கே.வால் பாதிக்கப்பட்டவர் என்பதால் சென்னை கிளம்ப நினைக்கும் பிரபுதேவாவை மும்பையிலேயே பிடித்து வைத்து வேறு நடனபள்ளி ஆரம்பிக்க தூண்டுகிறார் கணேஷ்.

பிரபுதேவாவும், கணேஷ் எதிர்பார்க்காத வகையில் காசுக்காக நடனம் கற்று தருவதை தவிர்த்து திறமைகள் இருந்தும் பல்வேறு குரூப்களாக பிரிந்து கிடக்கும் அந்த குப்பத்து இளைஞர்களுக்கு டான்ஸ் சொல்லித்தர களம் இறங்குகிறார். அப்புறம், அந்த இளைஞர்களின் பெற்றோர் போடும் தடைகள், தன் நண்பர் கே.கேவின் நக்கல் நையாண்டி, சூழ்ச்சி ‌எல்லாவற்றையும் தாண்டி அந்த இளைஞர்களை மும்பையில் நடைபெறும் இண்டர்நேஷனல் டான்ஸ் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார், ரசிகர்களை வியக்க வைக்கிறார்.

பிரபுதேவாவின் அடிப்படையே நடனம் என்பதால் ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக படத்தில் பாத்திரத்தோடு ஒன்றிப்போய், ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார். நட்பு, துரோகம், நம்பிக்கை என்று நடிப்பில் சாந்த சொருபியாக நம்மை வியக்க வைக்கும் பிரபுதேவா, நடனம் என்று விந்துவிட்டால், நடராஜரூபமாக வெளுத்து கட்டுவது படத்தின் பெரும்பலம்.

பிரபுதேவாவின் நல்ல நண்பர் கம் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவும் கூட அம்மாம் பெரிய உடம்பை தூக்கி கொண்டு அந்த அசத்து அசத்துவதும், கெட்ட நண்பர் கே.கே.மேனன் க்ளைமாக்ஸ் போட்டியில் பிரபுதேவா நடனக்குழுவினரை விலை பேசுவதும், அதில் ஒருவனை தூக்கி வந்து அவர்களது கான்செப்ட்டை இவரது குழு மூலம் அரங்கேற்றுவதும் எதிர்பாராத திருப்பங்கள். தனது நடன குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டது கடைசிநேரத்தில் தெரிந்தும் அதுபற்றி கவலைப்படாமல் மும்பை வீதிதோறும் குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் பிள்ளையார் டான்ஸையே வித்தியாசமும், விறுவிறுப்பாக செய்து காட்டி நடன போட்டியில் பிரபுதேவா குழு வெல்வதும் சூப்பர்ப்!

பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா தவிர கே.கே.மேனன், சல்மான், லூரன் கோட்டிலிப் என்று நட்சத்திர பட்டாளம் மொத்தமும் வட இந்தியமுகங்களாகவே தெரிவது படத்தின் பலவீனம்!

ஆனாலும் சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும், ரெமோ டிசோசாவின் இயக்கத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" படத்தை, இன, மொழி, முகபேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன பேஷ், பேஷ்!

ஆக மொத்தத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" (ஏ.பி.சி.டி) - "ரசிக்கலாம் ஆடியன்ஸ்!"

===========================================








விஜய் தற்போது இயக்குனர் விஜய்யின் ஒரிஜினல் கதை என்று சொல்லப்படும் "தலைவா" படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் "ஜில்லா". சூப்பர்குட் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். நேசன் இயக்குகிறார். கும்கி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்த இசையமைப்பாளரான இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இதில் விஜய்யுடன் மோகன்லால் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க மோகன்லால் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறாராம். விஜய்யும் கேரளாவில் தனக்கு தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் அவரும் ஆர்வம் காட்டுகிறார்.

துப்பாக்கி ரிலீஸான போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் “ என்னை மலையாளத்தில் நடிக்கும்படி பலரும் கேட்கிறார்கள்.என்னுடன் மாலிவுட் திரையுலகின் பெரிய நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றோர் நடித்தால் நான் நடிக்க தயார்” என்று கூறினார்.



இதுபற்றி மோகன்லால் கேரளாவில் அளித்த பேட்டியில் "ஜில்லாவின் படப்பிடிப்புக்காக ஆர்வமாக இருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் நடக்கும் 2வது கட்ட படப்பிடிப்பில்தான் எனக்கான போர்ஷன் படமாக இருக்கிறது. அதற்காக இப்போதே எனது தேதிகளை ஒதுக்கி வைத்துள்ளேன்.

இந்தப் படம் இரு மொழிகளிலும் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது. மேலும் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த விஜய்யின் ‘Hot & Spicy Girlfriend’ காஜல் அகர்வால் தான் புதிய படத்திலும் ஜோடியாம்.

 படப்பிடிப்பு எப்போது ஆரம்பித்தாலும் ஒரு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தர சம்மதித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளர். ஜில்லாவில் நடிக்க மோகன்லாலுக்கு கொடுக்கப்பட இருக்கும் சம்பளம். அவர் இதுவரை வாங்கியிராத சம்பளம் என்று கூறப்படுகிறது.

=======================



16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தவர் பாரதிராஜா. அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், முதல்மரியாதை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்தவர். சென்னை நகருக்குள்ளே முடங்கியிருந்த சினிமா ஷூட்டிங்கை கிராமத்து கதை களத்திற்‌கு கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. கிராமும், கிராமத்து மண்சார்ந்த மனிதர்களும் இவரது படத்தில் பெரும் பங்காக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது கனவுப்படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையை கையில் எடுத்து, படத்தையும் முடித்துவிட்டார். இப்படம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

* அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பூஜையை தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், கிராமத்து ஆட்டம், பாட்டு கொண்டாட்டத்துடன், வீரப்ப அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படு அமர்க்களமாக ஆரம்பித்தார் பாரதிராஜா. மேலும் இந்தவிழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களை தனது கிராமத்திற்கு அழைத்து வந்தார். 

* ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் டைரக்டர் அமீர், இனியா, புதுமுகம் லக்ஷ்மண், கார்த்திகா ஆகியோர் நடிப்பதாக இருந்து, படத்திற்கான ஷூட்டும் நடந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அமீர், இனி‌யா ஆகியோர் நீக்கப்பட்டனர். 

* அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. சுமார் 10 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவை ராதா ஆட்டிப்படைத்தார் என்றால் மிகையல்ல. அதேப்போல் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள கார்த்திகா, அம்மா ராதாவை காட்டிலும் சிறப்பாக நடித்துள்ளாராம். நிச்சயம் கார்த்திகாவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்தளவுக்கு கார்த்திகா இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம். 

* தன்னுடைய சினிமா கேரியரில் எத்தனையோ ஹீரோக்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, இந்தப்படத்திலும் சினிமாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு இளைஞனை, ஒரு கல்லூரி மாணவனை, ஒரு கிரிக்கெட் வீரனை ஹீரோவாக்கி இருக்கிறார். அவர் லக்ஷ்மண். இவர் பாரதிராஜாவின் நண்பர் மகன் ஆவார். 

* பாரதிராஜா மகன் மனோஜ் ரொம்பநாளைக்கு பிறகு அன்னக்கொடி படத்தில் சடையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அப்படியே கிராமத்து இளைஞராகவே மாறியிருக்கிறார். இவரது நடிப்பும் பெரிதும் பேசப்படுமாம். 

* சினிமா வாசனையே இல்லாத மதுரை மண்ணின் மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது மிகச்சிறப்பு.

* இந்தப்படத்தின் கதைகளம் மதுரை என்பதால் இயக்குனர் பல நாட்கள் அலைந்து திரிந்து, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அழகிய கிராமம் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார். மேலும் படத்தின் ஒரு பகுதியை படமாக்குவதற்கென கலை இயக்குனர் மோகன் மகேந்திரன் அவர்களால் ஆண்டிப்பட்டி அருகே 20 கி.மீ தொலைவில் மலைஅடிவாரத்தில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது.

* வைரமுத்து, அறிவுமதி ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கங்கை அமரனும் இப்படத்திற்காக பாடல் எழுதியுள்ளார். 

* இதுவரை தனது படங்களுக்கு இளையராஜா, எ.ஆர்.ரஹ்மா‌ன் ஆகியோரை இசையமைக்க வைத்த பாரதிராஜா, தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரை இப்படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார். 

* படத்தில் வசனம் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்டத்தின் கருமாத்தூரை சேர்ந்த ரோஸ் முகிலன் என்பவரை இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார். 

* தன்னுடைய படங்களுக்கு இதுவரை நிவாஸ், கண்ணன் ஆகி‌யோரை மட்டுமே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்த பாரதிராஜா முதன்முறையாக சாலை சகாதேவன் என்கிற புதிய ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

* கதாநாயகனும், கதாநாயகியும் ஆடு மேய்ப்பவர்களாக நடிப்பதால் 200 ஆடுகளும், 100 மாடுகளும் பிரத்தியேகமாக வாங்கப்பட்டு படமாக்கப்பட்டது.

* அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் காதலோடு யாரும் ‌எதிர்பார்க்க முடியாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இயக்குனர் இமயம் சொல்லியிருப்பது இன்றைய சினிமாவில் புதுசாக இருக்கும்.

* படத்தின் பூஜையை போலவே படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக மதுரையில் நடத்தினார். இதில் இசைஞானி இளையராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களுடன் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பல திரை நட்சத்திரங்களையும் மதுரைக்கு வர வழைத்து அசத்தினார். 

தற்போது படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதம் அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் திரைக்கு வர இருக்கிறது.

===========================



100 ஆண்டு தமிழ் சினிமா 



இளையராஜா 

1976 ஆம் ஆண்டில் 'அன்னக்கிளி' திரைப் படத்தில் இசையமைப்பாளராகிய ராசையா என்ற இளையராஜா மண் மணக்கும் கிராமத்து இசையை அறிமுகப்படுத்தி திரைப்பட ரசிகர்களை தன வயப்படுத்தினார். பின்னாட் களில் நவீன மற்றும் சாஸ்திரிய இசையிலும் வியத்தகு வித்தைகள் புரிந்து 'மாஸ்ட்ரோ'வாக இன்றளவிலும் அதே சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

சங்கர் -கணேஷ்,வி.குமார்,கங்கை அமரன்,சந்திரபோஸ் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பும் சீர்காழி கோவிந்த ராஜன்,ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,டி.கே.கலா போன்ற பாடகர்களின் செல்வாக்கும் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.


கே.பாலச்சந்தரைத் தொடர்ந்து 1977ல் '16 வயதினிலே' படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த தெற்கத்தி மண்ணின் கலைஞன் பாரதிராஜா தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியல் கலாசாரத்தை வண்ணத் திரைப் படமாக்கிப் படைத்து பெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்.

16 வயதினிலேயின் கதையமைப்பும் அதில் கமல் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

பாரதிராஜாவும் சிவாஜியும் இணைந்து உருவான 'முதல் மரியாதை' உலகத் திரைப்பட வரிசையில் இடம் பெற்றது. பாரதியின் சீடன் பாக்கியராஜ் புத்திசாலித்தனமான திரைக் கதையாலும் சாதுர்யமான வசனங்களாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.




மகேந்திரன் 

1978 ஆம் ஆண்டில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் மகேந்திரன் என்ற மகத்தான படைப்பாளியை உலகுக்குத் தந்தது.மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்', 'நண்டு'போன்ற படங்கள் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி பார்வையாளருக்கு புதிய திரை அனுபவங்களைத் தந்தன.

1979 ஆம் ஆண்டில் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமான பாலு மகேந்திரா 'மூடுபனி',மூன்றாம் பிறை','வீடு', சந்தியா ராகம்' போன்ற திரைக் காவியங்களால் சினிமாவின் முப்பரிமாணங்களை வெளிப் படுத்தி அழியாப் புகழ் பெற்றார்.


.'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் சினிமாவின் நிறக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்தார்.மக்கள் ஆதரவோடு அரசியலில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாடு சட்டசபை எதிக்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தான் அவர்.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது' என்னும் கவித்துவமான வரிகளோடு1980ஆம் ஆண்டில் ஒரு கரிசல் காட்டிலிருந்து தமிழ்த் திரைக்கு வருகை தந்த வைரமுத்து ஏறத்தாழ 5800 பாடல்களை எழுதி இந்தியாவிலேயே முதல்வராக ஆறு தேசிய விருதுகளைப் பெற்று 'கவிப்பேரரசு'வாகத் திகழ்கிறார்.'


1981 ஆம் ஆண்டில் வெளியான பாரதிராஜாவின் ;அலைகள் ஓய்வதில்லை' ஆழமான காதல் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியது.அந்தப் படத்தில் அறிமுகமான கார்த்திக் பின் வந்த காலத்தில் உணர்வு பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நவரச நாயகனானார்.


ஸ்டுடியோ வட்டாரத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பாரதிராஜாவின் வரவிற்குப் பிறகு கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டது.பொள்ளாச்சியும் திருநெல்வேலியும் தேனியும் வெளிப்புறப் படப்பிடிப்புக் களங்களாகின.


இந்தக் காலக்கட்டத்தில் விஜயகுமார், சத்யராஜ், மோகன், பிரபு,முரளி, அர்ஜுன், சரத்குமார்,நிழல்கள் ரவி போன்ற கதா நாயகர்களும் சுஜாதா, ரேவதி, சரிதா, குஷ்பு, அம்பிகா, ராதா, கவுதமி சில்க் ஸ்மிதா போன்ற கதாநாயகிகளும் எஸ்.வி.சேகர், சுருளிராஜன் ஆகிய நகைச்சுவை நடிகர்களும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள்.


1982 ல் ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன் ' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ரகுவரன் தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து அண்மையில் இயற்கை எய்தினார்.


1983 ஆம் ஆண்டில் சாலையில் தான் கண்ட ஒரு பள்ளி மாணவியை தன படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.அவரது தேர்வு வீண் போகவில்லை.ஆஷா என்ற அந்தப் பெண் ரேவதியாக 'மண்வாசனை'யில் அறிமுகமாகி சிறந்த நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தனியிடத்தைப் பிடித்தார்.சினிமாவில் முதிர்ந்த அனுபவத்தோடு தற்போது இயக்குனராகவும் பரிணமித்திருக்கிறார். 

மணிரத்னம் ,எஸ்.ஏ .சந்திரசேகர், மணிவண்ணன்,  ஆர்.சுந்தர ராஜன்,ஆர்.கே.செல்வமணி,விக்ரமன்,டி .ராஜேந்தர்,மனோபாலா, பாசில்,எஸ்.பி.முத்துராமன்,பி.வாசு, விசு, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார்,ஷங்கர் ஆகிய திறமையாளர்கள் 80 மற்றும் 90 ஆம் வருடங்களில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி சிறந்த படங்களை இயக்கினார்கள்.


1985 ல் வெளியான 'கன்னிராசி' வெற்றிபெற்று பாண்டிய ராஜன்'என்ற திறமைசாலியைத் தமிழ்த் திரைக்குத் தந்தது. பாண்டியராஜன் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று சிறந்த இயக்குனர்-நடிகராகத் திகழ்ந்தார்.


1986 ஆம் ஆண்டில் 'ஊமைவிழிகள்' படத்தின் மூலமாக நிகழ்ந்த அரவிந்தராஜ், ஆபாவாணன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பிரவேசம் தொழிநுட்ப ரீதியாக ரசிகர்களிடையே பிரமிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. 


'மவுனராகம் ','நாயகன்','அக்னி நட்சத்திரம்' ,'அஞ்சலி' ,தளபதி', 'ரோஜா',போன்ற மணிரத்னத்தின் படங்களும் 'ஜென்டில்மேன்', 'காதலன்',''இந்தியன்',ஜீன்ஸ்','முதல்வன்' போன்ற ஷங்கரின் படங்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஆங்கிலப் படங் களுக்கு இணையான பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்தின.


1987 ல் வெளியான மணிரத்னத்தின் 'நாயகன்' கமலஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் ஒரு சிறப்பான பாத்திரத்தை ஏற்றிருந்த பீரங்கி மூக்கு நாசர் அனைவராலும் கவனிக்கப்பட்டு சிறப்பான எதிகாலத்தைப் பெற்றார்.


தமிழ்நாடு,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய இடங்களை மட்டுமே கொண்டிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகத் தொடர்பு இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களால் இங்கி லாந்து,அமேரிக்கா, கனடா நார்வே என உலக அளவில் விரிவடைந்தது.

'மவுனராகம்' படத்தின் மூலமாக அறிமுகமான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் முப்பரிமான வித்தைகள் புரிந்தார்,அது மட்டுமல்லாமல் இன்றைய தமிழ்த் திரையின் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்கள் பலரும் பயின்ற பல்கலைக் கழகமும் அவரே.


1989 ல் வெளியான 'புதியபாதை'யில் முற்றிலும் புதியதான கதைக்களத்தைப் படைத்து இயக்குனர்-நடிகர் ஆர்.பார்த்திபன் அனைவரையும் வியக்க வைத்தார்.


90 ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகின் ரத்த நாளங்களில் இளரத்தம் புகுந்து புத்துணர்ச்சியும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளும் உருவானது என்று சொல்லலாம். 

விஜய்,அஜீத்,அரவிந்தசாமி, பிரபுதேவா,ராஜ்கிரண் ஆகிய கதாநாயகர்களும் சீதா,சிம்ரன்,மீனா,தேவயாணி,நக்மா ஆகிய கதாநாயகிகளும் ராஜீவ் மேனன்,கஸ்தூரிராஜா,சுந்தர்.சி.,செல்வா ஆகிய இயக்குனர்களும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரை வானில் தோன்றினார்கள்.


1991 ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' யில் ஒரு பாடல் காட்சியில் நடித்து திரை வாழ்க்கையைத் தொடங்கிய வடிவேலு ஷங்கரின் 'காதலன்' படத்தின் மூலமாகத் திருப்பம் பெற்று தனது ஜனரஞ்சகக் காமெடி மூலமாகப் புகழ் பெற்று விரைவில் நாட்கணக்கில் ஊதியம் பெரும் சகாப்தத்தைத் துவக்கி வைத்தார்.


'புரியாத புதிர்' படத்தை இயக்கி தனது கலைப்பயணத்தை துவங்கிய கே.எஸ்.ரவிகுமார் இன்று மிக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக உலா வருகிறார்



ஏ.ஆர்.ரகுமான் 

1992 ல் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் 'சின்ன சின்ன ஆசை' பாடல் உலகமெங்கும் ஒலித்தது.இங்கிலாந்து நாட்டின் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது.அதன் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 2009 ஆம் ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று சிகரம் தொட்டு எல்லாப்புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார்


அதே ஆண்டில் வெளிவந்த 'தேவர் மகன்' மனித குலத்தின் பழிக்குப்பழி என்கிற கொடூரமான குணாதிசயத்தின் கொடுமையை விளக்கி மாபெரும் வெற்றி பெற்றது.


இயக்குனர் செல்வாவின் 'அமராவதி' அழகும் போராட்டக் குணமும் கொண்ட அஜித் குமாரை அறிமுகப்படுத்தியது. எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நாளைய தீர்ப்பு' அமைதியும் திறமையும் கொண்ட விஜயைத் தந்தது.


ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து ஏராளமான திறமைசாலி இளைஞர்களை இயக்குனராக அறிமுகம் செய்தது

தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்த் திரை யுலகில் நுழைந்து வெற்றி பெற்றார்கள்.அதன் விளைவாக தமிழ் சினிமாவின் கதைக்களத்திலும் பேச்சு மொழியிலும் மதுரை பகுதிகளின் தாக்கம் விரிவுபட்டது.


உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஒருவர் கதாநாயகனாகி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வியாபார மதிப்பு பெற்ற நிகழ்வு 1990 களில் நிகழ்ந்தது.கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ராமராஜன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்து கிராமத்துக் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று 1998 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.



கரகாட்டக்காரன் 

கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழக் காமெடி நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணியும் செந்திலையும் அந்தக் காட்சியை எழுதிய வீரப்பனையும் தமிழ் சினிமா உள்ளவரைக்கும் நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.


பாலாஜியின் சுஜாதா புரொடக்சன்ஸ் ,கவிதாலயா, ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ்,சிவாஜி புரொடக்சன்ஸ், ராஜ்கமல் இன்டர்நேசனல் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனங்கள் தரமான படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றன.


1996 ஆம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'ஔவை சண்முகி' படத்தில் கமல் படம் முழுவதும் முழு நீள பெண் வேடம் ஏற்று நடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தார்.


1997 ல் ஹென்றி தயாரித்த 'பாரதி கண்ணம்மா' படத்தின் இயக்குனராக அறிமுகமான சேரன் கமர்ஷியல் அடையாளம் தவிர்த்து 'பொக்கிஷம்',தவமாய்த் தவமிருந்து',ஆட்டோகிராப்' போன்ற மிகச் சிறந்த படங்களைத் தந்து பல தேசிய விருது களையும் வென்று நாளடைவில் கதாநாயகனாகவும் பரிணமித்துள்ளார்.


வசந்த்தின் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டில் உருவான ;நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார் நடிகர் சிவகுமாரின் புதல்வரான சூர்யா.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து திறமையான இளைஞராகக் களத்தில் நிற்கிறார் சூர்யா.


சரண், எஸ்.ஜே.சூர்யா,வி.சேகர்,சுரேஷ் கிருஷ்ணா ,விகரமன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இயக்குனர்கள் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள். 


அண்மைக் காலத்தில் உலகப் படைப்பாளிகளின் கவனத்தைத் தமிழ் சினிமாவை நோக்கித் திருப்பிய ஒரு இளைஞர் தன முதல் படைப்பைத் திரையிடுவதற்கு மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்தார்.இறுதியில் திறமை வென்றது.1999ஆம் ஆண்டில் 'சேது'படம் பாலா என்ற புதுமை இயக்குனரை தமிழ் சினிமா வுக்குத் தந்தது.இதுவரையில் தமிழ் சினிமா அறியாத கதா பாத்திரங்களை வைத்து பாலா உருவாக்கும் படங்கள் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெறுகின்றன.


சேதுவின் வாயிலாக அறியப்பட்ட சீயான் என்னும் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தரத்துக்கு மெருகேற்றி வருகிறார்.

'வாலி'யில் சிறு வேடத்தில் அறிமுகமாகி 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் கதாநாயகியானார் ஜோதிகா உணர்வு களை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கண்கள் ஜோதிகாவின் சிறப்பு.அவரது குழந்தை முகம் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப் பட்டது.புகழின் உச்சத்தில் இருந்தபோதே ஜோதிகா தான் நேசித்த சூர்யாவை மணந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


எஸ்.ஏ.ராஜ்குமார்,தேவா போன்ற இசையமைப்பாளர்கள் இந்தக்காலக்கட்டத்தில் புகழோடு விளங்கினார்கள்.


கே.பாலசந்தரால் 'டூயட்' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் செல்லமானார்.சம்பாதித்த பொருளை தமிழ் சினிமாவிலேயே முதலீடு செய்து 'மொழி', 'அபியும் நானும்' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.


விளம்பரப் படங்களில் நடித்து வந்த ஆர்.மாதவன் 2000 ஆவது ஆண்டில் மணிரத்னம் அவர்களால் 'அலை பாயுதே' என்ற படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து வந்த கவுதம் வாசுதேவ் மேனனின் 'மின்னலே' படத்தின் மூலம் காதல் நாயனாக இடம் பிடித்தார்.


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மென்மையான காதலை நளினமாக வெளிப்படுத்துகின்ற படங்களை இயக்கி தனக்கென தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.


2001 ஆம் ஆண்டில் அஜித்தின் 'தீனா' வை இயக்கி அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் 'ரமணா' மற்றும் 'கஜினி'ஆகிய மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் சாதனை படைத்து குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.


இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் புதல்வரும் இஞ்சினியரிங் பட்டதாரியுமான செல்வராகவன் அவரது சகோதரரான தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் கதையை எழுதி அடுத்து ;காதல் கொண்டேன்; வெற்றிப் படத்தின் மூலமாக இயக்குனரானார்.இந்தப்படம் சகோதரர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அமைத்துக் கொடுத்தது.

இயக்குனர் டி .ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து 2002 ஆம் ஆண்டில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் வாயிலாக கதாநாயகனானார்.பிறகு வந்த 'மன்மதன்', வல்லவன்' ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராகவும் பரிணமித்தார்.

இளையராஜாவின் புதல்வரான யுவன் சங்கர் ராஜா 1996 ஆம் ஆண்டில் தனது 16ஆவது வயதில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் பெற்று 2002ல் வெளியான ;துள்ளுவதோ இளமை'படத்தில் புதுப்புது இசைக் கோர்வைகளைக் கையாண்டு புகழ் பெற்று இளமை ததும்பும் பாடல்களைத் தருகிறார்.


'பிதாமகன்','அந்நியன்', 'காக்க காக்க'. 'அன்பே சிவம்', சிவாஜி' .தசாவதாரம்' போன்ற படங்கள் 21 ஆம் நூற்றாண்டுத் துவக்க ஆண்டுகளின் குறிப்பிடத் தக்க தமிழ்ப் படங்களாகும்.

'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களை ஏற்று நடித்து நடிகர் திலகம் சிவாஜியின் உலக சாதனையை விஞ்சினார்.



இலங்கைப் போர் 

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் போராட்டக் களத்தில் இறங்கியது.இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோர் சிறை சென்றார்கள்.தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கத்தோடு சீமான் 'நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினார்.

ஷங்கர் இயக்கிய 'இந்திரன்' சுமார் 162 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ் சினிமாவின் மெகா பட்ஜெட் படமாகியது. இதில் ரஜனி இயந்திர மனிதனாக நடித்தார். ஹாலிவுட் படங் களுக்கு இணையாக இந்தப்படத்தின் தொழிநுட்பம் அமைந்திருந் தது.

தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் புதிய தயாரிப்பாளர்கள் குறைந்த முதலீட்டுப் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.புதிய நாயகர்களும் நாயகிகளும் அறிமுகம் ஆனார்கள்.அதிக அளவில் படங்கள் வெளியாகின.

பரத், ஆர்யா, ஜெயம் ரவி, விஷால்,கரன், பிரித்விராஜ், பசுபதி, சந்தானம் ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமான நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.

பிரியன், விஜய் மில்டன், கே.வி.ஆனந்த், ரத்னவேல், ஆர்தர்.பி. வில்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்களும் நா.முத்துக்குமார், கபிலன், பா.விஜய், சினேகன்,பழனி பாரதி ஆகிய பாடலாசிரியர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
.
பாலாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்ட அமீர் 'பருத்தி வீரன்' என்ற படத்தை இயக்கி வெளியிட்டபோது தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்தது.தமிழ்த் திரை தனக்கென வகுத்திருந்த பல நியதிகள் பருத்திவீரனில் அடித்து நொறுக்கப்பட்டன. கதாநாயகனாக மிகச் சிறப்பாக நடித்து அறிமுகமான சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திரத் தகுதி பெற்றார்.

அமீரின் உதவியாளரான சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' என்ற மற்றுமொரு புரட்சிக் கதையைக் கொண்ட படத்தை எழுதி இயக்கி ,தயாரித்து வெற்றி பெற்று தமிழ் சினிமாக் கலாசாரத்தின் மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தினார்,

பாண்டிராஜின் 'பசங்க', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்', சுசீந்திரனின்'அழகர்சாமியின் குதிரை',சசியின் 'பூ',பிரபு சால மோனின் 'மைனா' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டின.

துவக்க காலத்தில் பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இங்கே அமைந்திருந்ததால் சென்னை நகரின் ஒரு பகுதியான கோடம் பாக்கம் தமிழ் சினிமாவின் தலைமையகமாகக் கருதப்பட்டது. அதன் விளைவாக தமிழ் சினிமா 'கோலிவுட்' என்று பெயர் பெற்றது.

நடிகர் சூர்யா 'அகரம்' என்கின்ற அறக்கட்டளையைத் தொடங் கினார்,அதன் மூலமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாக் கலைஞர்களின் புதுமையான உத்திகளும் தொழில்நுட்பத் திறமையும் மற்ற மொழிகள் சார்ந்த திரை உலகத்தினரை வியக்க வைத்தது.இந்த புதிய விஷயங்களை அவர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தினார்கள்.

தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் ஒளிப்பதிவாளர்களும் நடன மற்றும் சண்டைப் பயிற்சியாளர்களும் மற்ற மொழிக் கலைஞர் களின் அழைப்பின் பேரில் நேரடியாகவும் பங்குபெற்று பிற மொழிப் படங்களிலும் தங்கள் சிறப்புக்களை வெளிப்படுத்தினார் கள் 

100ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்டு எல்லாத் துறை களிலும் தமிழ்த் திரையுலகம் ஏற்றம் பெற்று விளங்கும் காலம் இது. வருங்காலமும் இதேபோல வளமும் நலமும் பெற்றுத் திகழ வேண்டும் என்பது உலகத் தமிழ் மக்களின் விருப்பம்.



100 ஆண்டு தமிழ் சினிமா.-பாகம்-1

அபூர்வப் புகைப் படங்களையும் காட்சிகளையும் கொண்டு ஆவணப் படமாக உருவாகிக் கொண் டிருக்கின்ற 100 ஆண்டு தமிழ்த் திரையின் வரலாறு இங்கே எழுத்துருவாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

100 ஆண்டு தமிழ் சினிமா 

                                                                                                           
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 1897 ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருந்த ஆங்கிலேயர்களுக்காக கதையம்சம் எதுவுமில்லாத சாதாரண நிகழ்வுகளைக் கொண்ட சத்தமில்லாத துண்டுப் படங்கள் விக்டோரியா ஹாலில் திரையிடப்பட்டன. அண்ணா சாலையில் தற்போது அமைந்துள்ள அஞ்சல் அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் ' எலெக்ட்ரிக் தியேட்டர்' என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அங்கேயும் இம்மாதிரிப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன.


மவுனப் படங்கள் 

திருச்சியில் வசித்த ' சாமிக்கண்ணு வின்சென்ட்' என்பவர் ' [Du Pont ]  டூபாண்ட் 'என்ற பிரஞ்சுக்காரரிடம் இருந்து திரையீட்டுக் கருவி யையும் துண்டுப் படங்களையும் விலைக்கு வாங்கி ஊர் ஊராகச் சென்று கொட்டகை அமைத்து படங்களைத் திரையிட்டார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1909 ஆம் ஆண்டில் சென்னைக்கு வருகை தந்தபோது இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட படத்தோடு ஓசையையும் தரக்கூடிய ' குரோன் மெகபோன் ' என்ற கருவியை ரகுபதி வெங்கையா என்பவர் விலைக்கு வாங்கி ஒரு தற்காலிக சினிமாக் கொட்டகையைத் தொடங்கினார்.1912 ஆம் ஆண்டில் அது ;கெயிட்டி' என்ற பெயரில் சென்னையின் முதல் நிரந்தர திரை அரங்கமாக மாற்றப்பட்டது.

1916 ஆம் ஆண்டில் நடராஜ முதலியார் என்ற மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பவருக்கு ஏற்பட்ட திரைப்பட ஆர்வத்தால் லண்டனுக்குச் சென்று ' ஸ்டீவர்ட் ஸ்மித் ' என்ற ஒளிப் பதிவாளரிடம் பயிற்சி பெற்று வந்து புரசைவாக்கம் மில்லர் சாலையில் இந்தியா பிலிம் கம்பனி லிமிடட் ' என்ற நிறுவனத்தைத் தொடங்கி ' கீசக வதம்' என்ற மவுனப் படத்தை இயக்கித் தயாரித்தார்.1917 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்பட மாகும்.

1918 ஆம் ஆண்டில் இந்தியாவில் திரைப்படத் தணிக்கை முறை அமலாகப்பட்டதை அடுத்து சென்னையில் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

ரகுபதி வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாஷ் ஹாலிவுட் மற்றும் ஜெர்மனியில் திரைப்படப் பயிற்சி பெற்று வந்து ' மீனாட்சி கல்யாணம்' என்ற திரைப்படத்தை தன தந்தையுடன் இணைந்து தயாரித்தார்.இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் திரையில் தலையில்லாமல் தோன்றியது இந்தப்படத்தின் ஒரு விரும்பத்தகாத சிறப்பு.ரகுபதி பயன் படுத்திய35 m.m Williamson  வில்லியம்சன் கேமராவின் லென்ஸ் தொழில்நுட்பத்தில் இருந்த கோளாறுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது பின்னால் தெரியவந்தது.

பின்னாட்களில் வெற்றிகரமான இயக்குனராகத் திகழ்ந்த ரகுபதி பிரகாஷ் இங்கேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு தனது வீட்டில் ஒரு தொழிற்க்கூடத்தை அமைத்து கையாலேயே படச் சுருள்களைப் பதப்படுத்தினார்.

அந்தக் காலக்கட்டத்தில் கதாநாயகனாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இன்னொருவர் கி.நாராயணன்.' கருட கர்வ பாகம்[1920],'பீஷ்ம பிரதிக்னா '[1922],'கஜேந்திர மோட்சம்']1930]ஆகிய படங்கள் மவுனப் படவுலகில் முக்கியமானவையாகும்.

.ஒய் .வி.ராவ் என்ற இயக்குனர் 1930 ஆம் ஆண்டில் ' பாண்டவ நிர்வாணா', சாரங்கதாரா' ஆகிய படங்களை வெளியிட்டார்.1931 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'லைலா' என்ற படம் ஏராளமான அரை நிர்வாணக் காட்சிகளையும் உதட்டோடு உதடு இணைந்த நேரடியான முத்தக் காட்சிகளையும் கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா ? அந்தக் காலக் கட்டத்தில் பாலுணர்வுக் காட்சிகளை விட அரசியல் சார்ந்த காட்சிகளே தணிக்கையாளர்களால் பிரச்னைக்குரியதாகக் கருதப்பட்டன.

கதாநாயகனாகவும் இயக்குனராகவும் திகழ்ந்த 'ராஜா சாண்டோ' என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டை P.K.நாகலிங்கம் மற்றும் அஸ்ஸோஸியேட் பிலிம் கம்பெனியை உருவாக்கிய தயாரிப்பாளர் பத்மநாபன் ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபலங்கள் ஆவார்கள்.



டி .பி.ராஜலட்சுமி  

இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ' ராஜேஸ்வரி' என்ற மவுனப்படத்தின் கதாநாயகியான டி .பி. ராஜலட்சுமி பிற்காலத் தில் பேசும்படக் கதாநாயகியாகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் 1950ஆம் ஆண்டுவரை தமிழ்த திரையில் கோலோச்சி வந்தார்.இந்தியாவின் முதல் பெண் இயக்குனராக மட்டுமல்லாமல் அனேகமாக உலகின் முதல் பெண் இயக்கு னராகவும் திகழ்ந்தவர் இவர்

ஸ்டண்ட் ராஜூ மற்றும் பாட்லிங் மணி ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபல கதாநாயகர்கள் ஆவார்கள்.

கதைக் களத்தோடு வெளியான மவுனப் படங்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் விதமாக படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஆர்மோனியம் மற்றும் தபேலா ஆகிய இசைக் கருவி களைக் கொண்டு நேரடியாக பின்னணி இசை கொடுக்கப் பட்டது.திரை ஓரமாக ஒருவர் நின்றுகொண்டு கதை ஓட்டத் தையும் கதாபாத்திரங்கள் பேசுகின்ற வசனங்களையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்து பார்வையாளர்களை படத்தோடு ஒன்றச் செய்தார்.

சிறிய நகரப் பகுதிகளில் மேள  தாள இசையோடு மாட்டு வண்டிகளில் ஊர்வலம் வந்து படங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது.1940 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும் இந்த விளம்பர முறை நடைமுறையில் இருந்தது.

 பேசும் படங்கள் 


1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் துவங்கி மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கின. திரையில் பேசி ஆடிப் பாடும் மனிதர்களைக் கண்டு மாயாஜாலமோ என மக்கள் மயங்கினார்கள்.

தமிழின் முதல் பேசும்படமாக பாம்பேயில் உருவான ' காளிதாஸ் ' என்ற படத்தில் கதாபாத்திரங்கள் தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் பேசினார்கள்.1932ஆம் ஆண்டில் வெளிவந்த ' காளவாரிஷி ' என்ற படம்தான் முழுவதுமாகத் தமிழில் உருவான படமாகும்.இந்தப் படத்தின் மூலமாக ஜி.ராமநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றார்.

1933 ஆம் ஆண்டில் ' சீதா கல்யாணம் ' என்ற படம் வெளியானது. அதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் பிற்காலத்தில் கதாநாயகனாக, இயக்குனராக, இசைக்கலைஞனாக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக பன்முகத் திறன் பெற்று விளங்கினான்.அவர் வீணை மேதை எஸ்.பாலச்சந்தர்.

அதே படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் பிற் காலத்தில் ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைத் தந்தார். பாரம்பரிய இசைக்கலைஞ்னாகப் பரிணமித்தார். அவர் இசை மேதை பாபநாசம் சிவன்.

அதே ஆண்டில் வெளிவந்த ' வள்ளிதிருமணம் 'வசூல் சாதனை படைத்த முதல் தமிழ்த திரைப்படம் என்றால் அடுத்த ஆண்டு 1934 ல் வெளியான ' பாமா விஜயம் 'அதையும் விஞ்சி வசூல் சாதனை படைத்தது.

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஆர்.பிரகாஷ் 'திரவ்பதி வஸ்திராபகரணம் ' என்ற படத்தில் ஒரே ப்ரேமில் ஐந்து கிருஷ்ணர்களைப் பதிவு செய்து தொழில்நுட்பம் குறைந்த அந்தக் காலத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கினார்.

தமிழ்நாட்டில் பேசும் படத்தினை உருவாக்குவதற்கான எந்த வசதியும் அப்போது இல்லாதிருந்ததை உணர்ந்து தயாரிப்பாளர் கி. நாராயணன் 1934 ஆம் ஆண்டில் 'ஸ்ரீனிவாசா சினிடோன் 'என்ற படப்பிடிப்புத் தளத்தையும் ; சவுண்ட் சிட்டி ' என்ற ஒலிப்பதிவுக் கூடத்தையும் உருவாக்கினார்.

நாராயணின் மனைவியான மீனாட்சி கணவரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி தென்னிந்தியத் திரைப்படத் துறையின் முதல் பெண் தொழில்நுட்ப வல்லுனராகப்  பெயர் பெற்றார்.


 சூப்பர் ஸ்டார் 

1934ஆண்டு கிருஷ்ணசாமி சுப்ரமணியம் என்ற  சட்ட வல்லுநர் இயக்கிய ' பவளக்கொடி ' என்ற படம் வெளியானது.பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்று தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன எம்.கே.தியாகராஜா பாகவதர் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியின் ' கிருஷ்ணசாமி அஸோஸியேட்' நிறுவனம் இன்றும் ஆவணப் படத் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது. 

தனது கம்பீரக் குரல்வளத்தால் மேடை நாடகங்களில் புகழ் பெற்றிருந்த கே.பி.சுந்தராம்பாள் 1935 ஆம் ஆண்டில் வெளியான ' நந்தனார் ' படத்தில் ஆண் வேடத்தில் நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதை விடவும் சிறப்பான இன்னொரு தாக்கமும் அந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.நந்தனார் படத் துக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று கே.பி.சுந்தராம்பாள் பெரிய சாதனை படைத்தார். 

1935 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த மற்றுமொரு வெற்றிப் படமான ' மேனகா 'மேடை நாடகமாக நடத்தப்பட்ட போது அதில் நடித்திருந்த டி .கே.சண்முகம் மற்றும் டி .கே. முத்துசாமி சகோதரர்கள் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.


என்.எஸ்.கிருஷ்ணன் 

தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தனது நடிப்பாலும் சீர்திருத்தக் கருத்துக்களாலும் சிறைப்படுத்திய ' கலைவாணர் ' என்று புகழப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணனும் இந்தப் படத்தில்தான் அறிமுகப் படுத்தப் பட்டார். தொடர்ந்து வந்த பல படங்களில் இணைந்து நடித்த என்.எஸ். கிருஷ்ணனும் டி .ஏ .மதுர மும் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் தனது காட்சிகளைத் தானே எழுதி இயக்கிப் படமாக்கிக் கொடுத்ததும் நிகழ்ந்தது.

1936 ஆம் ஆண்டில் வெளியான குடிப்பழக்கத்தின் கேடுகளை விவரிக்கும் ' சதி லீலாவதி ' திரைப்படம் தமிழ்த் திரை உலகத்துக்கு மிகப்பெரும் மேதைகள் பலரை அறிமுகம் செய்தது.கதாசிரியரான எஸ்.எஸ்.வாசன்,கதாநாயகரான எம்.கே ராதா,டி .எஸ். பாலையா,எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் அறிமுகமாகி பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் சிகரம் தொட்டார்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இந்தப் படத்தை இயக்கி அதன்பின் அடுத்தடுத்து பல தரமான வெற்றிப் படங்களைத் தந்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ' சிந்தாமணி '1937 ஆம் ஆண்டில் வெளியாகி ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.இந்தப் படத்தின் வருவாயைக் கொண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மதுரை நகரில் சிந்தாமணி திரையரங்கத்தைக் கட்டினார்கள்.

ஆரம்ப காலச் சிறந்த தமிழ்ப் பத்திரிகைகளில் ஒன்றான ' மணிக்கொடி தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய நிறைகுறைகளை எழுதி வந்தது.நாளடைவில் அதில் பணி  புரிந்த இளங்கோவன்,பி.எஸ்.ராமையா போன்றவர்கள் திரைத் துறையில் இணைந்து சிறந்த கதை ,வசன எழுத்தாளர்களாகத் திகழ்ந்தார்கள்.1937 ல் வந்த தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாவதி ' திரைப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய இலக்கிய நயத்தோடு கூடிய வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டன. 

பாகவதர் நடித்த இன்னொரு படமான ' ஹரிதாஸ் ' சென்னை பிராட்வே அரங்கத்தில் மூன்று தீபாவளிப் பண்டிகைகளைக் கண்டு நூற்றுப்பத்து வாரங்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

இதயத்தை வருடுகின்ற இனிய குரலால் உலகப் புகழ் பெற்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழ்த் திரைக்கு அறிமுகமானது 1938 ஆம் ஆண்டு. கே.சுப்ரமணியம் தயாரித்து இயக்கிய ' சேவாசதனம் 'படத்தில் அறிமுகமான அவர் பின்னாளில் பாரம்பரிய இசையில்[Classical ] மிகப்பெரிய பரிமாணத்தோடு விளங்கினார்.

;ஸ்ரீவள்ளி ' படத்தில் பாடி நடித்துப் பெயர் பெற்றார் டி .ஆர். மகாலிங்கம் .'செந்தமிழ் தேன்மொழியாள் 'என்ற அவர் பாடிய பாடல் இன்றளவும் இளமையோடு இசைக்கக் கேட்கலாம்.' 

மேலைநாட்டுக் கல்வியும் நாகரிகமும் கற்றிருந்த திருச்செங் கோட்டைச் சேர்ந்த டி .ஆர். சுந்தரம் 1937 ஆம் ஆண்டில் சேலம் நகரில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெளி நாட்டுத் தொழிநுட்பக் கலைஞர்களை வரவழைத்து புதுமையான தொழில்நுட்பங்களுடன் கூடிய சொந்த படப்பிடிப்புக் கூடத்தில் பல படங்களைத் தயாரித்தார்.ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில்150 படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.


 முதல் இரு வேடத் தமிழ்ப் படம் 

1940 ஆம் ஆண்டில் முதன்முதலாக வேற்று மொழி நாவல் ஒன்று தமிழ்த் திரைப்படமாக் கப்பட்டது.புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸின் '‘The man In the Iron mask' என்ற நாவல் உத்தமபுத்திரன் என்ற தலைப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால் படமாக்கப்பட்டு வெளியானது.இந்தப்படம் ஒரு நாயகன் இரட்டை வேடத்தில் நடித்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாகும்.இந்தப் படம் பி.யு .சின்னப்பா என்ற மற்றுமொரு மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டியது.'ஆரியமாலா', 'கண்ணகி', 'மனோன்மணி', 'ஜெகதலபிரதாபன்' போன்ற படங்கள் மூலமாக ரசிகர்கள் பி.யு.சின்னப்பாவை தியாகராஜ பாகவதருக்கு அடுத்த நிலையில் வைத்து அழகு பார்த்தார்கள்.

1940 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.வாசன் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவைத் துவங்கினார்.அதே ஆண்டில் காரைக்குடியைச் சேர்ந்த ஏ .வி.மெய்யப்பச் செட்டியார் தேவகோட்டை அருகே தற்காலிகமாக ஒரு படப்பிடிப்புக் கூடத்தை நிறுவினார்.பின்னால் அது சென்னையில் ஏ .வி.எம்.ஸ்டுடியோவாக உருவானது.'நாம் இருவர்' என்கின்ற சிறப்பு வாய்ந்த தமிழ்ப்படம் ஏ .வி.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியானது.தமிழ்த் திரையுலகின் மிகப் பழமை வாய்ந்த நிறுவனமான அது இன்றும் அதன் உரிமையாளர்களைப் போல மாறாத இளமையோடு துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமாண்டத் தயாரிப்பாக 1948 ஆம் ஆண்டில் வெளியான ' சந்திரலேகா ' பல மொழிகளில் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று இந்தியத் திரைப்படங்களின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.இந்தப் படத்தில் நடித்த எம்.கே.ராதா, ரஞ்சன் ,
 டி .ஆர். ராஜகுமாரி ஆகியோர் பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.

'நீல மலைத் திருடன் ' படத்தில் 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா' என்ற பாடலோடு ரஞ்சன் குதிரையில் வரும் காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காது பதிந்து விட்ட ஒன்று.

நாடக நடிகையான கோபிசாந்தா ' மாலையிட்ட மங்கை' படத்தில் மனோரமாவாக அறிமுகம் ஆனார்.ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட அவர் அன்போடு 'ஆச்சி' என்று அழைக்கப் பட்டார்.1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையைப் பதிவு செய்துள்ள அவர் பாடிய ' வா வாத்யாரே வூட்டாண்ட' என்ற பாடலைக் கேட்டதுமே நம் முகத்தில் புன்னகை பூக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் எம்.கே.ராதா தமிழ்த் திரையுலகில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார்.

இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னியின் சிபாரிசின் பேரில் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு 1946 ஆம் ஆண்டில் டி .எம்.சவுந்தரராஜனுக்கு பாடகராக வாய்ப்பளித்தார் .1950 ல் வெளியான 'கிருஷ்ண விஜயம் ' திரைப்படத்தில் சவுந்திரராஜன் பாடிய 'ராதே என்னை விட்டுப் போகாதேடி' என்ற தியாகராஜா பாகவதர் பாணியிலான பாடல் மிகப்பெரும் ஹிட் ஆக அதன்பின் சவுந்தரராஜனின் கலைப்பயணம் நிறுத்தமேயில் லாது தொடர்ந்தது.அவரது வெண்கலக் குரல் உச்ச நடிகர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரது இமாலய வெற்றிக்கு மிகப்பெரும் பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ .எம்.ராஜா ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களின் மூலமாக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தனர்.


அரசியல் ஆதிக்கம் 

1940 களின் இறுதி வருடங்கள் தமிழ்த் திரையுலகின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லலாம்.ஏனெனில் வருங்காலத் தில் தமிழ்நாட்டின் அரசியலில் செலுத்தப் பட விருக்கின்ற தமிழ்த் திரையுலகின் அபரி மிதமான ஆதிக்கத்திற்கு இந்தக் காலத்தில் தான் வித்திடப்பட்டது.

பிற்காலத்தில்  ' அண்ணா' என்று அழைக்கப்பட்ட சி.என்.அண்ணா துரை 1949 ஆம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்துக்கு கதை,வசனம் எழுதினார் .அடுத்து அண்ணாவின் சீடரான எம்.கருணாநிதி 'ராஜகுமாரி', 'பராசக்தி' மலைக்கள்ளன்', 'புதுமைப் பித்தன்'உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு எழுத்துப்பணி புரிந்தார்.  

'சதி லீலாவதி'யில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் 1947ல் வெளியான 'ராஜகுமாரி'யில் கதா நாயகனாக நடித்தார்.அடுத்து 1954ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்தின் மூலமாக நட்சத்திர அங்கீகாரம் பெற்ற எம்.ஜி.ஆர் தனக்கென்று தனிப்பட்ட பாணியையும் கொள்கைகளையும் கடைப்பிடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து அதன் மூலமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்று 1977ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார்.ஒரு அதிசய மனிதராக இன்றளவும் தமிழ் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறார்.

'கலங்காதிரு மனமே','கண்ணனின் காதலி' ஆகிய படங்களின் மூலமாக 1949ஆம் ஆண்டில் பாடலாசிரியராக அறிமுகமான முத்தையா என்ற கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான பாடல் களைப் படைத்து 'கவியரசு'வாகி அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்று அடுத்து வந்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்த் திரை யுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். 

'பராசக்தி'யில் [1952] ஞானசேகரனாக அறிமுகம் பெற்ற மேடைக் கலைஞர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது சீர்மிகு நடிப்பாலும் திருத்தமான தமிழ் உச்சரிப்பாலும் சிறப்புப் பெற்று 1950 முதல் 60 வரையிலான காலத்தில் எஸ்.எஸ்.ஆர் என்ற சிறப்புப் பெயருடன் தமிழ்த் திரையின் மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.



சிவாஜி கணேசன் 

அதே பராசக்தியில் கதாநாயகன் குணசேகரனாக வாழ்ந்த வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகப் பட்டம் சூட்டப் பெற்று ஒரே படத்தில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்து உலகத்தின் கவனத்தையே தன்பால் திருப்பி நடிகர் திலகமாகி அடுத்து வந்த அனைத்து நடிகர்களிடமும் தனது தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

'மிஸ் மாலினி' படத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்த இன்னுமொரு கணேசன் ஜெமினி கணேசனாகி தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்ததால் காதல் மன்னன் என்ற பட்டத் தோடு புகழ் பெற்றுத் திகழ்ந்தார்.

1950 ஆம் ஆண்டில் 'அவன் அமரன்' படத்தின் இசையமைப்பாள ராக அறிமுகமானார் கே.வி.மகாதேவன்.ஏறத்தாழ 600 படங் களுக்கு இசையமைத்துள்ள அவருடைய பாடல்களில் ' நலந்தானா','மன்னவன் வந்தானடி' போன்றவை என்றும் நம் நினைவில் நிற்பவை.

1952 ஆம் ஆண்டில் வெளியான 'பெற்றதாய்' படத்தில் ஏ .எம். ராஜாவோடு 'ஏதுக்கு அழைத்தாய்' என்ற டூயட் பாடலைப் பாடி அறிமுகமான பி.சுசீலா கேட்போரின் இதயங்களை வருடும் எண்ணற்ற பாடல்களைப் பாடி இசைக்குயில் என்ற பட்டத்தோடு ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்று தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார். 

சிவாஜியின் இரண்டாவது படமான 'பணம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர்களாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரு இளைஞர்கள் அறிமுகமாகி காலப்போக்கில் பலநூறு நெஞ்சில் நிறைந்த திரைப்பாடல்களைத் தந்தார்கள்.அதன்பின் விஸ்வ நாதன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனாக தனித்து இசைப்பணியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நினைத்தாலே இனிக்கும் பாடல்களைத் தந்தார்.

1954 ஆம் ஆண்டில் வெளியான கெட்ட சகவாசத்தால் சீரழிந்து போகின்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கின்ற ' ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று தமிழ்த்திரையின் மிக சுவாரஸ்யமான குணச்சித்திர நடிகராக விளங்கினார்.

ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகொஸ் என்ற இயற்பெயர் கொண்ட சந்திரபாபு இந்தக் கட்டத்தில் அறிமுகமாகி பின்னாட்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் தமிழ்த் திரையுலகில் ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.அவரது பாடல்கள் இன்றும் கேட்போரை மயங்கச் செய்கின்றன.

1955 ல் ;மகேஸ்வரி' என்ற படம் வெளியாகி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மக்கள் கவிஞனை தமிழ்த் திரை யுலகுக்கு கொடையாகக் கொடுத்தது.

கோயம்புத்தூரில் அமைந்திருந்த பட்சிராஜா ஸ்டுடியோ 1950 முதல் 1960வரையில் மிகப் பரபரப்பான படப்பிடிப்புக் கூடமாக இருந்தது.நாளைடைவில் சென்னையிலேயே ஸ்டுடியோக்கள் அமைந்து விட்டதால் பட்சிராஜா ஸ்டுடியோவின் தேவை குறைந்து போனது. 

1956 ஆம் ஆண்டில் சினிமா ஜாம்பவான் எல்.வி.பிரசாத் அவர்களால் துவங்கப்பட்ட பிரசாத் ஸ்டுடியோ இன்றளவும் ஒரு முழுமையான திரைப்படத் தயாரிப்புக் கூடமாகத் திகழ்ந்து வருகிறது.



முதல் வண்ணப் படம் 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1956ல் வெளியான 'அலிபாபா வும் நாற்பது திருடர்களும் 'படம்தான் தமிழ்த் திரை யுலகின் முதல் வண்ணத் திரைப் படமாகும்.

கூட்டிசை பாடி வந்த லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற எல்.ஆர். ஈஸ்வரி 1958 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவனால் 'பெரிய இடத்துச் சம்பந்தம்' என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டுப் புகழ் பெற்றார்.'வாராயோ தோழி வாராயோ'என்ற அவரது பாடல் தமிழ்நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் இன்றும் ஒலிக்கத் தவறுவதில்லை.

ஜெயசங்கர்,முத்துராமன்,ரவிச்சந்திரன்,சிவகுமார்,பி.எஸ்.வீரப்பா,எம்.என்.நம்பியார்,அசோகன், மேஜர் சுந்தரராஜன், ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், வி.கே. ராம சாமி,கே.ஏ .தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பின்னாளில் பத்திரிகையாளரான சோ ஆகிய நடிகர்களும் கண்ணாம்பாள், சாவித்திரி, பி.பானுமதி, அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா,சரோஜாதேவி,பத்மினி,சவுகார் ஜானகி, விஜயகுமாரி, கே.ஆர்.விஜயா,காஞ்சனா, ஜமுனா,சாரதா, வாணிஸ்ரீ,புஷ்பலதா,டி .பி.முத்துலட்சுமி,சச்சு ஆகிய நடிகை களும் 1960ஆம் ஆண்டு களின் இறுதி வரையிலும் தமிழ்த் திரையுலகில் பெரும் புகழோடு திகழ்ந்தார்கள். 

1961ஆம் ஆண்டில் தமிழ்த்  திரையுலகம் வாலி என்ற மகா கவிஞனை வரமாய்ப் பெற்றது.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி தலைமுறை வித்தியாசங்களைத் தவிடு பொடியாக்கி தன எழுத்தில் இன்றும் இளமையோடு வாழ்கிறார்.அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் புனைந்த சாதனைச் சரித்திரமும் இவர் வசமே உள்ளது.

1962 ஆம் ஆண்டில் வெளியான மறக்க முடியாத திரைக்காவிய மான ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தின் மூலமாக அறியப்பட்ட நாகேஷ் 'சர்வர் சுந்தரம்; மூலம் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்து தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்டார். .'காதலிக்க நேரமில்லை' செல்லப்பாவையும் ,'திருவிளையாடல் தருமியையும்,'எதிர்நீச்சல்' மாதுவையும் ,'தில்லானா மோகனாம் பாள்' வைத்தியையும் தமிழ் உலகம் எந்நாளும் மறக்காது.

ஏ .சி.திருலோகச்சந்தர்,ஏ .பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ் ணன்,சி.வி.ராஜேந்திரன்,ஸ்ரீதர், பி.மாதவன், பி.நீலகண்டன், ஏ .பீம் சிங் ,கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இயக்குனர்களாக விளங்கினார் கள்.

ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை'யில் [1965] அறிமுகமான ஜெய லலிதா தொடர்ந்து வெற்றிப்படக் கதாநாயகியாகத் திகழ்ந்து பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்குப்பின் கட்சித் தலைமையேற்று தமிழ்நாட்டின் முதல்வரானார்.

1969 ல் வெளியான 'சிவந்தமண் 'திரைப்படம் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பெருமையைப் பெற்றது.

இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் உருவான 'சிங்கார வேலனே தேவா'என்ற பாடல் எஸ்.ஜானகியை தமிழ் மக்கள் மனதில் அரியணை போட்டு அமர்த்தி வைத்தது.

'குங்குமப் பூவே,கொஞ்சு புறாவே' என்ற பாடல் சந்திபாபுவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்தது.

'சாந்தி நிலையம்' படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி' என்று பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அடுத்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்'ணில் பாடிய 'ஆயிரம் நிலவே வா'
பாடலின் வாயிலாகப் பிரசித்தி பெற்று தன இளமை துள்ளும் குரலால் இன்றும் ரசிக்க வைக்கிறார். 

புதுமைப்பித்தன்,நாடோடி மன்னன்,ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண்,ரிக்க்ஷாக்காரன்,உலகம் சுற்றும் வாலிபன், வீர பாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,வசந்த மாளிகை,தங்கப்பதக்கம்,கல்யாணப்பரிசு,கொஞ்சும் சலங்கை, களத்தூர் கண்ணம்மா ஆகிய படங்கள் 60 ஆம் ஆண்டுகளின் குறிப்பிடத்தக்க தமிழ்ப்படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கெய்ரோ திரைப்பட விழாவில் பரிசு பெற்று தமிழ்த் திரையுலகத்துக்கு அடையாளம் பெற்றுத் தந்தது.



முதல் 70 m.m படம் 


ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் உருவான ' ராஜ ராஜ சோழன்' தமிழ்த் திரையுலகின் முதல் 70 m.m  அகல சினிமாஸ்கோப் படமாகும்.

60 களின் பிற்பகுதியில் சாண்டோ சின்னப்பாத் தேவரின் 'தேவர் பிலிம்ஸ்'நிறுவனம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பல பெரிய வெற்றிப் படங்களைத் தயாரித்து வழங்கியது.

பஞ்சு அருணாசலம்,மருதகாசி போன்றவர்கள் சிறந்த வசன கர்த்தாக்களாக வலம் வந்தார்கள்.

அறுபதுகளின் பிற்பகுதியில் மிகுந்த முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு இயக்குனர் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தமிழ்ப்படங்களின் போக்கையே மாற்றினார்.அவர் கே.பாலச்சந்தர்.பிரச்னைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக மக்களின் முன் படைத்த அவரை தமிழ்த் திரையுலகம் பெரும் சாதனையாளராகக் கொண்டாடி வருகிறது.

தற்காலத்தில் தமிழ்த் திரையின் வைரங்களாகச் ஜொலித்து வருகின்ற ரஜனிகாந்த், கமலஹாசன்,பிரகாஷ்ராஜ்,விவேக் போன்றவர்கள் இந்தக் கலைஞனால் கண்டெடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டவர்கள்தான்.


ரஜனி,கமல் 

பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜனிகாந்த், கமலஹாசன்,ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான ;மூன்று முடிச்சு' தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அலையைத் தோற்றுவித்தது.

ரஜனி தனித்துவமான ஸ்டைல் நடிப்பால் மக்களைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனார்.

கமல் பரீட்சார்த்தமான மற்றும்  வித்தியாசமான தோற்றங்களி லும் கதாபாத்திரங்களிலும் நடித்து சாதனை மேல் சாதனை படைத்து உலக நாயகனானார்.

ஸ்ரீதேவியை  ஹிந்தித் திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.அங்கேயும்  வெற்றி பெற்று அவர் அகில இந்திய நட்சத்திரமானார்.

----------------------------------------------------
சிவாஜி தி கிரேட்




பராசக்தி 17.10.1952
பணம் 27.12.1952
பரதேசி (தெலுங்கு) 14.01.1953
பூங்கோதை 31.01.1953
திரும்பிப்பார் 10.07.1953
அன்பு 24.07.1953
கண்கள் 05.11.1953
பொம்புடு கொடுகு 13.11.1953
மனிதனும் மிருகமும் 04.12.1953
மனோகரா 03.03.1954
இல்லற ஜோதி 09.04.1954
அந்த நாள் 13.04.1954
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 13.04.1954
மனோகரா (ஹிந்தி) 03.06.1954
மனோகரா (தெலுங்கு) 03.06.1954
துளி விஷம் 30.07.1954
கூண்டுக்கிளி 26.08.1954
தூக்குத்தூக்கி 26.08.1954
எதிர்பாராதது 09.12.1954
காவேரி 13.01.1955
முதல் தேதி 12.03.1955
உலகம் பல விதம் 14.04.1955
மங்கையர் திலகம் 26.08.1955
கோட்டீஸ்வரன் 13.11.1955
கள்வனின் காதலி 13.11.1955
நான் பெற்ற செல்வம் 14.01.1956
நல்ல வீடு 14.01.1956
நானே ராஜா 25.01.1956
தெனாலி ராமன் 03.02.1956
பெண்ணின் பெருமை 17.02.1956
ராஜா ராணி 25.02.1956
அமர தீபம் 29.06.1956
வாழ்விலே ஒரு நாள் 21.09.1956
ரங்கூன் ராதா 01.11.1956
பராசக்தி (தெலுங்கு) 11.01.1957
மக்களைப் பெற்ற மகராசி 27.02.1957
வணங்காமுடி 12.04.1957
புதையல் 10.05.1957
மணமகன் தேவை 17.05.1957
தங்கமலை ரகசியம் 29.06.1957
ராணி லலிதாங்கி 21.09.1957
அம்பிகாபதி 22.10.1957
பாக்கியவதி 27.12.1957
பொம்மல பெள்ளி (தெலுங்கி) 11.01.1958
உத்தம புத்திரன் 07.02.1958
பதிபக்தி 14.03.1958
சம்பூர்ண ராமாயணம் 14.04.1958
பொம்மை கல்யாணம் 03.05.1958
அன்னையின் ஆணை 04.07.1958
சாரங்கதாரா 15.08.1958
சபாஷ் மீனா 03.10.1958
காத்தவராயன் 07.11.1958
தங்க பதுமை 10.01.1959
நான் சொல்லும் ரகசியம் 07.03.1959
வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
மரகதம் 21.08.1959
அவள் யார் 30.10.1959
பாக பிரிவினை 31.10.1959
இரும்புத் திரை 14.01.1960
குறவஞ்சி 04.03.1960
தெய்வப் பிறவி 13.04.1960
ராஜ பக்தி 27.05.1960
படிக்காத மேதை 25.06.1960
பாவை விளக்கு 19.10.1960
பெற்ற மனம் 19.10.1960
விடிவெள்ளி 31.12.1960
பாவ மன்னிப்பு 16.03.1961
புனர் ஜென்மம் 21.04.1961
பாச மலர் 27.05.1961
எல்லாம் உனக்காக 01.07.1961
ஸ்ரீ வள்லி 01.07.1961
மருத நாட்டு வீரன் 24.08.1961
பாலும் பழமும் 09.09.1961
கப்பலோட்டிய தமிழன் 07.11.1961
பார்த்தால் பசி தீரும் 14.01.1962
நிச்சய தாம்பூலம் 09.02.1962
வளர் பிறை 30.03.1962
படித்தால் மட்டும் போதுமா 14.04.1962
பலே பாண்டியா 26.05.1962
வடிவுக்கு வளைகாப்பு 07.07.1962
செந்தாமரை 14.09.1962
பந்த பாசம் 27.10.1962
ஆலயமணி 23.11.1962
சித்தூர் ராணி பத்மினி 09.02.1963
அறிவாளி 01.03.1963
இருவர் உள்ளம் 29.03.1963
நான் வணங்கும் தெய்வம் 12.04.1963
குலமகள் ராதை 07.06.1963
பார் மகளே பார் 12.07.1963
குங்குமம் 12.08.1963
ரத்த திலகம் 14.09.1963
கல்யாணியின் கணவன் 20.09.1963
அன்னை இல்லம் 15.11.1963
கர்ணன் 14.01.1964
பச்சை விளக்கு 03.04.1964
ஆண்டவன் கட்ட்ளை 12.06.1964
கை கொடுத்த தெய்வம் 18.07.1964
புதிய பறவை 12.09.1964
முரடன் முத்து 03.11.1964
நவராத்திரி 03.11.1964
பழநி 14.01.1965
அன்புக் கரங்கள் 19.02.1965
சாந்தி 22.04.1965
திருவிளையாடல் 31.07.1965
நீலவானம் 10.12.1965
மோட்டார் சுந்தரம் பிள்ளை 26.01.1966
மகாகவி காளிதாஸ் 19.08.1966
சரஸ்வதி சபதம் 03.09.1966
செல்வம் 11.11.1966
கந்தன் கருணை 14.01.1967
நெஞ்சிருக்கும் வரை 12.03.1967
பேசும் தெய்வம் 14.04.1967
தங்கை 19.05.1967
பாலாடை 16.06.1967
திருவருட் செல்வர் 28.07.1967
இரு மலர்கள் 01.11.1967
ஊட்டி வரை உறவு 01.11.1967
திருமால் பெருமை 16.02.1968
ஹரிச்சந்திரா 11.04.1968
கலாட்டா கல்யைணம் 12.04.1968
என் தம்பி 07.06.1968
தில்லானா மோகனாம்பாள் 22.07.1968
எங்க ஊர் ராஜா 21.10.1968
லட்சுமி கல்யாணம் 15.11.1968
உயர்ந்த மனிதன் 29.11.1968
அன்பளிப்பு 01.01.1969
தங்க சுரங்கம் 28.03.1969
காவல் தெய்வம் 01.05.1969
குரு தட்சணை 14.06.1969
அஞ்சல் பெட்டி 520 27.06.1969
நிறை குடம் 09.08.1969
தெய்வ மகன் 05.09.1969
திருடன் 10.10.1969
சிவந்த மண் 10.11.1969
எங்க மாமா 14.01.1970
தர்த்தி (ஹிந்தி) 06.02.1970
விளையாட்டுப் பிள்ளை 20.02.1970
வியட்நாம் வீடு 11.04.1970
எதிரொலி 27.06.1970
ராமன் எத்தனை ராமனடி 15.08.1970
எங்கிருந்தோ வந்தாள் 29.10.1970
சொர்க்கம் 29.10.1970
பாதுகாப்பு 27.11.1970
இரு துருவம் 14.01.1971
தங்கைக்காக 06.02.1971
அருணோதயம் 05.03.1971
குலமா குணமா 26.03.1971
பிராப்தம் 13.04.1971
சுமதி என் சுந்தரி 13.04.1971
சவாலே சமாளி 03.07.1971
தேனும் பாலும் 22.07.1971
மூன்று தெய்வங்கள் 15.08.1971
பாபு 18.10.1971
ராஜா 26.01.1972
ஞான ஒளி 11.03.1972
பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
தர்மம் எங்கே 15.07.1972
தவப் புதல்வன் 26.08.1972
வசந்த மாளிகை 29.09.1972
நீதி 07.12.1972
பாரத விலாஸ் 24.03.1973
ராஜ ராஜ சோழன் 31.03.1973
பொன்னூஞ்சல் 15.06.1973
எங்கள் தங்க ராஜா 15.07.1973
கௌரவம் 25.10.1973
மனிதரில் மாணிக்கம் 07.12.1973
ராஜபார்ட் ரங்கதுரை 22.12.1973
சிவகாமியின் செல்வன் 26.01.1974
தாய் 07.03.1974
வாணி ராணி 14.04.1974
தங்க பதக்கம் 01.06.1974
என் மகன் 21.08.1974
அன்பைத் தேடி 13.11.1974
மனிதனும் தெய்வமாகலாம் 11.01.1975
அவன் தான் மனிதன் 11.04.1975
மன்னவன் வந்தானடி 02.08.1975
அன்பே ஆருயிரே 27.09.1975
டாக்டர் சிவா 02.11.1975
வைர நெஞ்சம் 02.11.1975
பாட்டும் பரதமும் 06.12.1975
உனக்காக நான் 26.01.1976
கிரகப் பிரவேசம் 10.04.1976
சத்யம் 06.05.1976
உத்தமன் 26.06.1976
சித்ரா பௌர்ணமி 22.10.1976
ரோஜாவின் ராஜா 15.12.1976
அவன் ஒரு சரித்திரம் 14.01.1977
தீபம் 26.01.1977
இளைய தலைமுறை 28.05.1977
நாம் பிறந்த மண் 07.09.1977
அண்ணன் ஒரு கோயில் 10.11.1977
அந்தமான் காதலி 26.01.1978
தியாகம் 04.03.1978
என்னைப் போல் ஒருவன் 19.03.1978
புண்ணிய பூமி 12.05.1978
ஜெனரல் சக்கரவர்த்தி 16.06.1978
தச்சோளி அம்பு (மலையாளம்) 27.10.1978
பைலட் பிரேம்நாத் 28.10.1978
ஜஸ்டிஸ் கோபிநாத் 16.12.1978
திரிசூலம் 26.01.1979
கவரி மான் 06.04.1979
நல்லதொரு குடும்பம் 03.05.1979
இமயம் 21.07.1979
நான் வாழ வைப்பேன் 10.08.1979
பட்டாக்கத்தி பைரவன் 19.10.1979
வெற்றிக்கு ஒருவன் 08.12.1979
ரிஷிமூலம் 26.01.1980
தர்மராஜா 26.04.1980
யமனுக்கு யமன் 16.05.1980
ரத்தபாசம் 14.06.1980
விஸ்வ ரூபம் 06.11.1980
மோகன புன்னகை 14.01.1981
சத்திய சுந்தரம் 21.02.1981
அமர காவியம் 24.04.1981
கல் தூண் 01.05.1981
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03.07.1981
மாடி வீட்டு ஏழை 22.08.1981
கீழ் வானம் சிவக்கும் 26.10.1981
ஹிட்லர் உமாநாத் 26.01.1982
ஊருக்கு ஒரு பிள்ளை 05.02.1982
வா கண்ணா வா 06.02.1982
கருடா சௌக்கியமா 25.02.1982
சங்கிலி 14.04.1982
வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
தீர்ப்பு 21.05.1982
நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24.06.1982
தியாகி 03.09.1982
துணை 01.10.1982
பரீட்சைக்குக நேரமாச்சு 14.11.1982
ஊரும் உறவும் 14.11.1982
நெஞ்சங்கள் 10.12.1982
பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு) 14.01.1983
நீதிபதி 26.01.1983
இமைகள் 12.04.1983
சந்திப்பு 16.06.1983
சுமங்கலி 12.08.1983
மிருதங்க சக்கரவர்த்தி 24.09.1983
வெள்ளை ரோஜா 01.11.1983
திருப்பம் 14.01.1984
சிரஞ்சீவி 17.02.1984
தராசு 16.03.1984
வாழ்க்கை 14.04.1984
சரித்திர நாயகன் 26.05.1984
சிம்ம சொப்பனம் 30.06.1984
எழுதாத சட்டங்கள் 15.08.1984
இரு மேதைகள் 14.09.1984
தாவணி கனவுகள் 14.09.1984
வம்ச விளக்கு 23.10.1984
பந்தம் 26.01.1985
நாம் இருவர் 08.03.1985
படிக்காத பண்ணையார் 23.03.1985
நீதியின் நிழல் 13.04.1985
நேர்மை 03.05.1985
முதல் மரியாதை 15.08.1985
ராஜரிஷி 20.09.1985
படிக்காதவன் 11.11.1985
சாதனை 10.01.1986
மருமகள் 26.01.1986
ஆனந்தக் கண்ணீர் 07.03.1986
விடுதலை 11.04.1986
தாய்க்கு ஒரு தாலாட்டு 16.07.1986
லட்சுமி வந்தாச்சு 01.11.1986
மண்ணுக்குள் வைரம் 12.12.1986
ராஜ மரியாதை 14.01.1987
குடும்பம் ஒரு கோவில் 26.01.1987
முத்துக்கள் மூன்று 06.03.1987
வீர பாண்டியன் 14.04.1987
அன்புள்ள அப்பா 16.05.1987
விஸ்வநாத நாயக்கடு (தெலுங்கு) 14.08.1987
அக்னி புத்ருடு (தெலுங்கு) 27.08.1987
கிருஷ்ணன் வந்தான் 28.08.1987
ஜல்லிக்கட்டு 28.08.1987
தாம்பத்யம் 20.11.1987
என் தமிழ் என் மக்கள் 02.09.1988
புதிய வானம் 10.12.1988
ஞான பறவை 11.01.1991
நாங்கள் 13.03.1992
சின்ன மருமகள் 23.05.1992
முதல் குரல் 14.08.1992
தேவர் மகன் 25.10.1992
பாரம்பர்யம் 13.11.1993
பசும்பொன் 14.04.1995
ஒன்ஸ் மோர் 04.07.1995
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) 15.08.1997
என் ஆச ராசாவே 28.08.1998
மன்னவரு சின்னவரு 15.01.1999
படையப்பா 10.04.1999
பூப்பறிக்க வருகிறோம் 17.09.1999

மர்மவீரன் 03.08.1956
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
குழந்தைகள் கண்ட குடியரசு 29.07.1959
தாயே உனக்காக 26.08.1966
சினிமா பைத்தியம் 31.01.1975
உருவங்கள் மாறலாம் 14.01.1983
நட்சத்திரம் 12.04.1980
பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
ராமதாஸு (தெலுங்கு) 23.12.1964
பங்காரு பாபு (தெலுங்கு) 15.03.1973
பக்த துகாராம் (தெலுங்கு) 05.07.1973
ஜீவன தீராலு (தெலுங்கு) 12.08.1977
சாணக்ட சந்திரகுப்தா (தெலுங்கு) 25.08.1977
ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31.01.1958
மக்கள ராஜ்ய (மலையாளண்) 05.08.1960
ஸ்கூல் மாஸ்டர் (ஹிந்தி) 03.04.1964