News


ஆகஸ்டு மாதம் நிர்ணயம்: தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்- கமிட்டி தலைவர் சிங்காரவேலு தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 11,626 தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை கோவிந்த ராஜ் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்தது. 3 வருடத்திற்கு பொருந்தக்கூடிய இந்த கல்வி கட்டணம் வருகிற மே மாதத்தில் நிறை வடைகிறது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு செலவு, குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிடமும் கேட்டு இருக்கிறோம். தினமும் 100 பள்ளிகள் வீதம் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

ஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 910 பள்ளிகளுக்கு இது வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. அந்த பள்ளிகளுக்கு இன்று முதல் தினமும் 100 பள்ளிகள் வீதம் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பள்ளிகளுக்கு 3 வாரத்துக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்த பள்ளி களிடமிருந்து 1 கோடியே 43 லட்சம் திருப்ப பெறப்பட்டு பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கல்வி கட்டணம் ஆகஸ்டு மாதம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் அதற்கு முன்னதாக திறந்து விடுவதால் மாணவர்கள் இந்த முறையும் அதிக கல்வி கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது.



மத்திய பட்ஜெட்

பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட், மொபைல் போன் மற்றும் உயர் ரக கார்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2வது முறையாக பதவியேற்றது. இந்த அரசின் கடைசியான, அதேநேரத்தில், முழு அளவிலான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைய, பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நேர்முக வரிகள் மூலம், 13 ஆயிரத்து, 300 கோடி மற்றும் மறைமுக வரிகள் மூலம், 4,700 கோடி என, கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படையான வருமான வரி வீதத்தில், எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், 2 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், தாங்கள் செலுத்தும் வரியில், 2,000 ரூபாயை குறைத்துக் கட்டும் வகையில், சிறிய வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால், வரி செலுத்துவோரில், 1.8 கோடி பேர் பலன் அடைவர். நாடு முழுவதும், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 42 ஆயிரத்து 800 பேர். இவர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். அதேபோல, கம்பெனிகளும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ரூபாய், 50 லட்சத்திற்கு மேல், எந்த ஒரு அசையாச் சொத்தை ஒருவர் விற்பனை செய்தாலும், இனி, 1 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பில், விவசாயம் சார்ந்த விளை நிலங்களுக்கு மட்டும், விதி விலக்கு உண்டு. இறக்குமதி செய்யப்படும் உயர்ரக சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிகள் மற்றும் மோட்டார் படகுகள் மீதான, இறக்குமதி வரி, 75 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கான, கலால்வரி, 27 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். புகையிலையில் தயாரிக்கப்படும், சிகரெட் மீது வரி விதிப்பது, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வழக்கமாக உள்ளது. அதேபோல், இந்த பட்ஜெட்டிலும், புகைப்பிடிப்போரின் பாக்கெட்டில் கைவைக்கும் வகையில், சிகரெட் மீதான கலால் வரி, 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மது அருந்த வசதி உள்ள, "ஏசி' உணவகங்களுக்கு மட்டுமே, இதுவரை சேவை வரி அமலில் இருந்தது. இனி, மது அருந்தும் வசதி இல்லா விட்டாலும், "ஏசி' உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும். மேலும், 2,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட, மொபைல் போன்களுக்கு, தற்போது அமலில் உள்ள, 1 சதவீத கலால்வரி, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்களின் விலை உயரும். தரையில் பதிக்க பயன்படும் பளிங்கு கற்கள், ஆயத்த ஆடைகள், தரை விரிப்புகள் மற்றும் சணல் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் குறையும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும், தொழில்கல்வி வகுப்புகள் மற்றும் விவசாய பரிசோதனை வசதிகள் போன்றவற்றுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரி செலுத்தாமல், ஏமாற்றி வருவோர், தானாக முன்வந்து வரி செலுத்தும் வகையில், பொது மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், 10 லட்சம் பேர் வரி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், தண்ணீர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் ஊரக மேம்பாட்டிற்காக, நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், வளர்ச்சி வீதம், 5 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தோனேசியா மட்டுமே. அதனால், இந்தியாவின் வளர்ச்சிவீதம், மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிதிபற்றாக்குறை என்பது, 5.2 சதவீதமாக உள்ளது. இதை, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பணவீக்கம், மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும், மொத்த விலை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் என்பது, 7 சதவீதம் வரை உள்ளது. உணவு பொருட்களின் மீதான பணவீக்கமே, அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய, உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என, மூன்று தரப்பினருக்கும், சில வகையில், பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டில்லி பாலியல் வன்முறைக்கு பலியான பெண்ணின் நினைவாக, "நிர்பயா' என்ற பெயரில், 1,000 கோடி முதலீட்டில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். பெண்களுக்கு என, தனியாக பொதுத்துறை வங்கி ஒன்றும், துவக்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இளைஞர்களுக்காக, 1,000 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமைகளை மேம்படுத்தும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முடிவில், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். ஏழைகளுக்கு வழங்கப்படும், மானிய உதவிகள் உள்ளிட்ட அனைத்துமே, நேரடியாக பயனாளிகளுக்கு, வங்கிகள் மூலமாக செலுத்தும் திட்டம் விரைவில், நாடு முழுவதும் அமலாகும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர போகுது... 
* மொபைல் போன்
* ஆடம்பர கார்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் அதிக வசதிகள் கொண்ட, உயர் ரக கார்கள்
* 800 சி.சி.,க்கு மேலான மோட்டார் பைக்குகள்
* உல்லாச படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் படகுகள்
* சிகரெட்
* குளிர்சாதன வசதி உணவகங்களில் சாப்பிட...
* 50 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையா சொத்துக்களை விற்றால்...
* தரையில் பதிக்கப்படும் மார்பிள்கள்* இறக்குமதி கச்சா பொருட்களில் தயாரிக்கப்படும் பட்டு ஆடைகள்* "செட்-டாப்' பாக்ஸ்கள்
* பார்க்கிங் கட்டணம்* 1 கோடி ரூபாய்க்கு மேல் வீடு வாங்கினால்...

குறைய போகுது...
* வணிக முத்திரையிடப்பட்ட ஆயத்த ஆடைகள்
* விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள்
* தரை விரிப்புகள் மற்றும் சணலில் தயாரான தரையை
மூட உதவும் பொருட்கள்
* உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் தானியம் மற்றும் உயர் ரக பருப்புகள்
* மரவள்ளிக் கிழங்கு
* வாகன அடிச்சட்டம்
கவர்ச்சியும் இல்லை; புதிய வரிகளும் இல்லை
* வருமான வரி வீதங்களில் மாற்றம் இல்லை
* 2 - 5 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, 2,000 ரூபாய் வரிச்சலுகை
* 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கு, 10 சதவீதம் கூடுதல் வரி
* முதல் முறை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, 1 லட்ச ரூபாய் வட்டி சலுகை
* 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆண்களும், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களும், வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரலாம்
* நெசவாளர்களின் கடன்களுக்கு, 6 சதவீத வட்டிச் சலுகை
* ராணுவத்திற்கு, 2 லட்சத்து 3 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* விவசாய கடன்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் கடன்
* புகையிலை பொருட்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும்
* ராஜிவ் சேமிப்பு திட்டத்தின் அதிகபட்ச வருமான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 12 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு
* நாட்டின் முதல் பெண்கள் வங்கி, அக்டோபரில் துவக்கப்படும்.
* ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம், கை ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் போன்றோருக்கும் விஸ்தரிப்பு
* 1,000 கோடி ரூபாயில், "நிர்பயா' நிதியம்
* நிதிப் பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும்
* திட்டச் செலவிற்கு, 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய்; திட்டமில்லா செலவுக்கு, 11 லட்சத்து 9,975 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* புதிய வரிகள் மூலம், 18 ஆயிரம் கோடி வசூல்
* சேவை வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டம்
* பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி நிதியுதவி
* சிறுதொழில் நிதியுதவி நிறுவனமான, "சிட்பி'யின் மறு நிதிக்கு, 10 ஆயிரம் கோடி நிதி
* சி.எஸ்.டி., முதற்கட்ட இழப்பீடாக, மாநிலங்களுக்கு, 9,000 கோடி ரூபாய்.
* தேசிய உணவு பாதுகாப்பு தவணைத் தொகை, 10 ஆயிரம் கோடியாக நிர்ணயம்
* அடிப்படை உற்பத்தி வரி, சேவை வரியில் மாற்றமில்லை
* கையாலான தரை விரிப்பு, சணல், கயிறு தரை விரிப்புக்கு சுங்க வரி விலக்கு

===================================


பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு "தடா': தமிழக மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு



பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

"ஆனந்த' அதிர்ச்சி":

மின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது' என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்' என்றனர்.

எதிர்பார்ப்பு:

இவர்களின் கூற்றின்படியே, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வெழுவர் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல, பிளஸ் 2 மாணவர் மட்டுமல்லாது, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும், தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.
==========================

கிரகம் செல்ல தம்பதிகளுக்கு வாய்ப்பு


செவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், "நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார்.

இவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில் இருந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்துக்கு சென்றால், பயண நேரம் குறைவாக இருக்கும்.

வரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு சென்று வர, 500 நாட்களே ஆகும். இந்த வாய்ப்பை தவற விட்டால், அதன் பின், செவ்வாய் கிரகம் சென்று வர, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.பூமியை விட்டு, வெகு தூரம் செல்லும் போது, பூமி ஒரு நீல நிற புள்ளி போல் தெரியும். அதை பார்த்த சந்தோஷத்தில், அருகில் இருப்பவரை, அணைத்து கொள்ள தோன்றும். எனவே, இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள், தம்பதிகளாக இருந்தால், நன்றாக இருக்கும்.

இவ்வாறு, டென்னிஸ் டிடோ கூறியுள்ளார்.

============================


ரயில்வே பட்ஜெட் 2013


லோக்சபாவில்  தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் எதுவும் நேரடியாக உயர்த்தப்படவில்லை. ஆனால், முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம், தத்கால் கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் துணை கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன.
வரும், 2013-14ம் ஆண்டிற்கான, ரயில்வே பட்ஜெட்டை, லோக்சபாவில், நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும், ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கட்டண உயர்வு இல்லாத பட்ஜெட்டை பன்சால் தாக்கல் செய்தார். அதே நேரத்தில், ரயில்வேயில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம், 5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் பன்சால் அறிவித்ததாவது:
பயணிகள் ரயில் கட்டணம், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டும் கூட, 850 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை, அரசு ஏற்றுக் கொள்ளும். டீசல் விலை உயர்வு காரணமாக, சரக்கு கட்டணம் உயர்த்தப்படும். வரும், 2013-14ம் நிதி ஆண்டில், ரயில்வே துறையில், 63 ஆயிரத்து, 363 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புதுடில்லி, நிஜாமுதீன், பழைய டில்லி ஆகிய ரயில் நிலையங்களை, நவீன வசதிகளுடன் கூடியதாக மேம்படுத்த, 100 கோடி ரூபாய் செலவிடப்படும். நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 797 இடங்களில், ஆளில்லா ரயில்வே, "கிராசிங்'கள் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம், இவை அனைத்தும், இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுவதுமாக நீக்கப்பட்டு, ஆளில்லா ரயில்வே, "கிராசிங்'கள் என்பதே, இல்லாத அளவுக்கு மாற்றப்படும். பயணிகளின் பாதுகாப்பை, உத்தரவாதப்படுத்துவதற்கு என, 10 ஆண்டு திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும். ரயில் விபத்துகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் மேம்படுத்தப்படும். செகந்தராபாத்தில், ரயில்வே பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். துறைமுக பகுதிகளை, ஒருங்கிணைக்க, 3,800 கோடி ரூபாய் வரை, ஒதுக்கப்படும். ரயில்களில், பெண்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, மேலும் கூடுதலாக, ரயில்வே பெண் போலீசார் பணியமர்த்தப்படுவர். ஆன்-லைன் டிக்கெட் பதிவு முறை, நவீனப்படுத்தப்படும். அதன்படி, இரவு, 11:30 மணி வரை, இன்டர்நெட் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போன்கள் மூலமாக, இ-டிக்கெட்டிங் வசதியும் ஏற்படுத்தப்படும். ரயில்வே சமையலறைகள் அனைத்தும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றதாக அமைக்கப்படும்.
ஏமாற்றம்:
இந்த ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. புதிய ரயில் திட்டங்கள் என்று பார்க்கும்போது, பெங்களூரு - சத்தியமங்கலம்; காரைக்கால் - பேரளம்; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை; ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்தில், துணை திட்டமாக, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஆவடி ஆகியவற்றை இணைக்கும் வகையில், துணை ரயில் பாதையும் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. காரைக்குடி - திண்டுக்கல்; காரைக்குடி - மதுரை; தஞ்சாவூர் - அரியலூர் மற்றும் திருநெல்வேலி - சங்கரன்கோயில் ஆகிய இடங்களில், புதிய ரயில்வே தடங்கள் அமைப்பதற்கு, சர்வே எடுக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
சென்னை - காரைக்குடி - வாரம் ஒருமுறை, சென்னை - பழநி - தினமும் - வழி: ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல், சென்னை எழும்பூர் - தஞ்சை - தினமும் - வழி: விழுப்புரம், மயிலாடுதுறை, சென்னை - ஸ்ரீரடி சாய்நகர் - வாரம் ஒருமுறை, கோவை - மன்னார்குடி - தினமும் - வழி: திண்டுக்கல், சென்னை - பிக்கானிர் - வாரம் ஒருமுறை - வழி: நாக்பூர், கோவை - ராமேஸ்வரம் - வாரந்தோறும், நாகர்கோயில் - பெங்களூரு - தினமும் - வழி: மதுரை, திண்டுக்கல், புதுச்சேரி - கன்னியாகுமரி - வாரம் ஒருமுறை - வழி: திருச்சி, புதுச்சேரி - திருப்பதி - வாரம் ஒருமுறை ஆகியவை கிடைத்து உள்ளன. பழநிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில், தினந்தோறும், பயணிகள் ரயில் இயக்கப்படும். அதேபோல, சென்னை - திருப்பதி இடையிலும், பயணிகள் ரயில் இயக்கப்படும்.
தற்போது இயக்கப்படும் ரயில்களில் சில, மேலும் சில ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தற்போதைய, சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி வரை நீட்டிக்கப்படும். மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும். மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில், பழநி வரை நீட்டிக்கப்படும். காரைக்குடி - மானாமதுரை ரயில், விருதுநகர் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வாரத்தில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படும், சென்னை - டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கப்படும். தற்போது வாரத்தில், ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படும், கன்னியாகுமரி - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். தற்போது, ஆறு நாட்களுக்கு இயக்கப்படும், நாகர்கோயில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில், இனி வாரம் முழுவதும் இயக்கப்படும். செங்கோட்டை - பகவதிபுரம் இடையிலான அகலப்பாதை திட்டம், இந்த ஆண்டு முடிவடையும். விழுப்புரம் - திண்டுக்கல் ரயில் திட்டத்தில், வாலடி - பழங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான இரட்டைப் பாதை பணிகள், இந்த ஆண்டு முடிவடையும்.
யாருக்கு?
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், புது ரயில்கள், பாதைகள் பெரும்பாலும், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தொகுதியான சிவகங்கையை மையப்படுத்தியே உள்ளன. அடுத்து, தி.மு.க., - எம்.பி.,யும் ரயில்வே ஆலோசனைக்குழு தலைவருமான, டி.ஆர்.பாலு தொகுதிக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவர், இப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். அடுத்த தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியை குறிவைத்து உள்ளார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும், அதிக அளவு முக்கியத்துவம் வழங்கும் வகையில், பட்ஜெட்டில் புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு, ரயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். இந்த பாதை, ஒற்றை பாதையாக இருப்பதால், அதிக அளவில் ரயில்களை இயக்க முடியவில்லை; வேகமாகவும் செல்ல வழியில்லை. இந்த பாதையை இரட்டை பாதையாக மாற்றி, மின் மயமாக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

உரையை பாதியில் நிறுத்திய பன்சால்:
ரயில்வே பட்ஜெட் உரையை, அமைச்சர் பன்சால் வாசித்த போது, எம்.பி.,க்கள் பலர், கோஷங்கள் எழுப்பினர். "பஞ்சாப்பிற்கே அனைத்து திட்டங்களும் வாரியிறைக்கப்பட்டு உள்ளன' என்று கூறி, அமளியில் இறங்கினர். அமைச்சர் பவன்குமார் பன்சால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், "இது ஒரு பஞ்சாப் ரயில் பட்ஜெட்' எனவும் கூச்சலிட்டனர். இதனால், பன்சால், தன் உரையை தொடர்ந்து வாசிக்க முடியாமல், திணற நேர்ந்தது. ரயில்வே பட்ஜெட்டை, தான் முழுவதும் படித்து விட்டதாக ஏற்றுக் கொள்ளும்படி, சபையில் அறிவித்து விட்டு, பாதியிலேயே நிறுத்தி விட்டார். ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலே, முதன் முறையாக, அமைச்சர் ஒருவர், பாதியிலேயே பட்ஜெட் உரையை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது, இதுவே முதன்முறை.
சொந்த தொகுதிக்கு பன்சால் தாராளம்:
ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சாலின் சொந்த தொகுதிக்கு, பல சலுகைகள் கிடைத்துள்ளன. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், சண்டிகார் லோக்சபா தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின், பொதுவான தலைநகரமாக, சண்டிகார் உள்ளது. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும், கணிசமான சலுகைகள் கிடைத்துள்ளன. நவீன சிக்னல் தொழில் நுட்ப வசதி, ஐந்து புதிய ரயில் பாதைகள், 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு புதிய பயணிகள் ரயில், ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவைதவிர, இந்த இரண்டு மாநிலங்களிலும், ஐந்து ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ரயில் பாதைகளை, மின் மயமாக்குவதற்கான அறிவிப்பும், நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு புதிய ரயில் பாதைகளை அமைப்பதற்கான ஆய்வுகள், வரும், மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்றும், நேற்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்சால், ரயில்வே அமைச்சராக பதவியேற்ற, குறுகிய காலத்துக்குள்ளேயே, சண்டிகார்-டில்லி இடையே, மூன்று சதாப்தி ரயில்கள், புதிதாக இயக்கப்பட்டுள்ளன. கடன்ரயில்வே துறைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, வரும் நிதியாண்டில், வெளிச் சந்தையில், 15 ஆயிரத்து, 103 கோடி ரூபாய் கடன் வாங்க, திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் வாங்கிய கடனை விட, அதிகம்.