கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்


பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.