தியானம் என்றால்



உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்; மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜா வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.
————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.

கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி

கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!

என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .

தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.

நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.

மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.

உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும்  தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.
தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.

ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.
தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல்  நடப்பதும் உமக்கு விளங்கும்.

இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.

பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:

1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.

3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக  ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற  ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.

4. இராஜ யோகம்:  நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான்  இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.

விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக  இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…






அஷ்டாங்க யோகம் அல்லது ராஜ யோகம் என்பதில் எட்டு நிலைகள் அல்லது 8 படிகள் உண்டு. யமம்; நியமம்; ஆசனம், பிரணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம் , சமாதி என. இதில் இந்த 8 நிலைகளிலும் தேர்ச்சியுற்ற மேதைகள் ஞானிகள்தான், சித்தர்தான், துறவிகள்தான், முனிவர்கள்தான், புத்தர்கள்தான்.

இவர்கள்தான் ராமகிருஷ்ணராக, விவேகானந்தராக, ரமணராக, ராகவேந்திரராக, சங்கரராக, ராமனுஜராக யேசுவாக இன்ன பிற உலகை திருத்த வந்த உத்தமராக பரிணமிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை: யமம்: அடிப்படை ஒழுக்கம். வாழ்க்கை முழுதும் கடைப்பிடிக்க வெண்டியதாக:-

1.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருத்தல்(எங்கள் வீட்டில் கொசு அடிக்கப்படுகிறது தியானம் அமர முடிய வில்லையே என; எலி அடிக்கப்படுகிறது அக்கப்போர் தாங்க முடியவில்லையே என்று).

2.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல்.

3.நினைவாலும் சொல்லாலும் செயலாலும் உண்மையைக் கடைப்பிடித்தல்.

4.பிரமசாரியம் காத்தல்

5.பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக்கொள்ளாதிருத்தல். இவையே.

இவற்றில் ஒன்றிரண்டையாவது கொஞ்சமாவாது கடைப்பிடிப்பவரிடம் கடவுள் இருக்கும்.ஏன் எனில் இப்போதெல்லாம் முழுதும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க ஆள் யாரும் இல்லை. எனவே கடவுளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்பதால் நிபந்தனைகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது.அப்படியும் இலட்சக்கணக்கானவர்களில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இந்த உணமையான நாட்டம் ஏற்படுகிறது. இதை கொஞ்சம் உரசிப்பார்த்தால் தற்போது சாமியார்கள் எல்லாம் நடத்தும் நாடகம் யாவும் புரியும். வியாபாரம் என்று தெரியும். மேல் சொன்ன 5 ஒழுக்கங்களும் பெரும்பாலும் எல்லா சமயங்களிலும் கிறிஸ்தவம்; புத்தம், சமணம், இந்து, முகமதியம் ஆகிய எல்லா மதங்களுக்கும் பொருந்துவதுதான். இவை ஆர்வமுள்ள மாந்தரால் ஆயுள் முழுதும் வாழ்வு முழுதும் கடைப்பிடிக்கவேண்டியதாக தியான முறைகள் சொல்கின்றன.

இதன்படிதான் சித்தர்கள் , யோகிகள்,  ஞானிகள் எல்லாம் வாழத்தலைப்பட்டனர்.நோ காம்ப்ரமைஸ். பூமிப்பூங்காவை நமது கைகளில் தாரை வார்த்துச் சென்றனர். ஆனால் இப்போதிருப்பதோ நம்மால் அள்ளிக் கொட்டவும் முடியா அசிங்கங்கள்.

நியமம்:- நியமம் என்றால் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய உடல் சுத்தம் தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு போன்றவை பற்றி சொல்வது.

ஆசனம்:- எங்கு எப்படி எந்த நேரத்தில் அமர்வது என்பது பற்றிய குறிப்புகள் இதைப்பற்றி பகவத்கீதையிலும், சித்பவானந்தரும் அழகாக குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரணாயாமம்:- முச்சுப்பயிற்சி இது தியானம் அமர்வதற்கு அவசியமான உடல் தயாரிப்பாக சொல்லப்படுகிறது. எண்ணங்களைத் தூய்மை செய்வதற்கு முன் இந்த பயிற்சி எவ்வளவு இன்றியமையாததாகிறது என்பதை சொல்வது ஆயுளை அதிகம் விருத்தி செய்ய பயன்படும்.

பிரத்யாஹாரம்:- அரவிந்தரும் , விவேகானந்தரும் இந்த பிரத்யாஹாரம் அடுத்து வரும் தாரணை பற்றி மிக அழகாக எளிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது குறிப்பிடவேண்டியது. இது நமது தியான நேரத்தில் நமை தொந்தரவு செய்யும் எண்ணங்களை எப்படி விரட்டுவது என்பது பற்றி சொல்வது.

தாரணை:- இது ஒரு பொருள் பற்றி சிந்தித்தல் என்பது. முன் சொன்னதன் தொடர்ச்சி அதாவது: எண்ணங்களை வடிகட்டி நமக்கு தேவையான ஒரே எண்ணம் மீது மட்டும் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை கற்பிப்பது. யேசு இது குறித்து நமது சீடர்களுக்கு நன்கு விளக்குவார்.

தியானம்:- இந்த நிலையை எட்டுவதுதான் தற்போதைய தியான வழிகளின் படிகளின் இலக்கு இதன் சில பல படிகளை கடக்கும்போது:

சமாதி நிலை: அல்லது முக்தி நிலை பெறலாம். சித்தி பெறலாம் புத்தர் ஆகலாம்.இது போன்ற சமாதி நிலையை உயிர் வாழும்போதே விவேகானந்தர் போன்றோர் அனுபவித்திருக்கிறார். இது போன்ற சமாதி அல்லது உணர்வற்ற உடலின் நிலையைத்தான் வாழும்போதே நமது முனிவர்கள் சித்தர்கள் பெற்றார்கள் அவர்களிடம் இயற்கையும் இயங்கியது.

தியானம் வெட்ட வெட்ட நீண்டு கொண்டே செல்லும் அற்புதச் சுரங்கம். முடிவில்லாமல் செல்லும். அள்ள அள்ளக் குறையாத அற்புதப் பரிசு. விண்வெளியில் ஒரு சிறு பறவை பறக்கும் அனுபவம்.வழி. மண்ணை அகல அகல வைரமணிகளாய் கிடைக்கும் விழி. இதன் சுழலில் சுழியில் அகப்பட்டவர்க்கு வெளிவரவே தோன்றாது.சுகம் . பரமசுகம். பேரின்பம் என்பது இது ஒன்றைத்தான். இது உங்களது வாழ்வில் உயரிய வழியில் உங்களைக் கேட்காமலே வழிநடத்தும் அளப்பரிய சக்தி மிக்கது. இருளின் ஆக்ரமிப்பைக் களையும் மெல் ஒளி.

இந்த மனவடக்கமே மாபெரும் வெற்றி எனத் தாயுமானவர் இதன் பெருமை பற்றி சொல்வதைக் கேளுங்கள்:

                         மனவடக்கமே மாபெரும் வெற்றி
                         —————————–
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
          கரடி வெம்புலி வாயையும்
        கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
           கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
            வேதித்து விற்றுண்ணலாம்
     வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
         விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
          சரீரத்தி மும் புகுதலாம்
       சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
                தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
              திறமரிது சத்தாகி யென்
         சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
                   தேசோ மயானந்தமே.
                 – தாயுமானவர்.
கந்து= குதிரை, கட்செவி= பாம்பு. சந்ததம்= ஆயுள்


நன்றி:
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment