ஆசையே அலைபோல


ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.
  • நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
  • அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.
  • துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.
  • நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.
ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. என்ன சுகம், என்ன சுகம்என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்
தெளிவிலாதேன

எல்லை மீறினால் எதுவும் துன்பமேஎன்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லைநமக்குமதானே?