திருமண வாழ்கையின் வெற்றிக்கான ரகசியம்


கே:திருமண வாழ்க்கை வெற்றி அடைய என்ன ரகசியம் உள்ளது?


குருதேவர்: நீ தவறான நபரிடம் கேள்வி கேட்கிறாய் என்று நினைக்கிறேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர் ஒருவரும், இத்தாலியிலிருந்து வந்த ஒரு பெண்ணும் இங்கு இருந்தார்கள். இருவரும் பல முறை திருமணம் ஆனவர்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி என் வாழ்த்தைப் பெற வந்திருந்தார்கள். குருதேவா! “இந்த முறையாவது எங்கள் திருமணம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள்” என்று வேண்டிக் கேட்டார்கள்.

நான் அந்த கனவானிடம் “உங்களுக்கு இத்தாலிய மொழி தெரியுமா?” என்று கேட்டேன். அவர், “தெரியாது” என்றார். அந்தப் பெண்ணிடம் “உங்களுக்கு ஜெர்மன் மொழி தெரியுமா?” என்று கேட்டேன். அவள் “தெரியாது” என்றாள். அந்த இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. நான் அவர்களிடம் “நீங்கள் இருவரும் மற்றவரின் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டாம். உங்கள் திருமணம் வெற்றியடையும்” என்றேன்.

கன்னடத்தில் ஒரு பழமொழி உள்ளது. வார்த்தைகளின் மூலம் தான் கலகம் துவங்கும். வார்த்தை களின் மூலம் தான் மனிதர்கள் கேலி பண்ணுகிறார்கள். வார்த்தைகளின் மூலம் தான் செல்வம் ஈட்டுகிறார்கள். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். பொதுவாக “தவறான அபிப்பிராயம் இருக்கும் போது அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்பார்கள். பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது. அது வேலை செய்யாது. நாம் அதைப் பற்றிப் பேசவே கூடாது. அதை மறந்து மேலே செல்லுங்கள். கடந்தவைகளை உட்கார்ந்து பேச வேண்டாம். கடந்து போனதற்கு விளக்கம் கேட்க வேண்டாம். தவறு நேர்ந்து விட்டது. அவ்வளவு தான். அதை மறந்து மேலே செல்லுங்கள்.

நீங்கள் தவறு செய்து விட்டதால், மற்றவர் அதற்கு உங்களிடம் விளக்கம் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நடந்த தவறுக்கு விளக்கம் அளிப்பது எவ்வளவு கடினமான செயல்? செய்தது சரி தான் என்று நிரூபிப்பதும் கடினம். இல்லையா? எப்போதும் மற்றவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள். இது மிகவும் முக்கியம். நீ யாரை குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்துகிறாயோ, அவர் உன் நண்பராக இருக்க விரும்ப மாட்டார். நட்பின் உறவு தளர்ந்து விடும்.

ஒருவருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படாமல் அவருடைய தவறை உணர வைப்பது சாமர்த்தியமான செயல். ஆனாலும் மற்றவர் குற்ற உணர்ச்சியால் தவிப்பதைப் பார்த்து மகிழ்வது சகஜமாகி விட்டது. இந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டு மற்றவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நம் நட்புறவு நீடிக்கும். பெண்களுக்கு ஒரு ரகசியம், மற்றும் ஆண்களுக்கு ஒரு ரகசியம் இருக்கிறது. இதைப் பற்றிப் புரிந்து கொண்டால், உங்கள் திருமண வாழ்க்கை வெற்றி பெற உதவும்.

பெண்களுக்கு:

உங்கள் கணவரின் தன்மானத்தை எப்போதும் சீண்டக்கூடாது.உலகம் முழுவதும் உங்கள் கணவரை முட்டாள், மூளையில்லாதவன் என்று சொல்லலாம்.ஆனால் மனைவி அப்படி எப்போதும் சொல்லக் கூடாது. நீ தான் இந்த உலகத்திலேயே அதி புத்திசாலி என்று சொல்ல வேண்டும். மனைவி தன் கணவனின் ஆணவத்தை உயர்த்தும்படியான சொற்களையே உபயோகிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.

மனைவி தன் கணவரிடம் “நீ ஒன்றுக்கும் உபயோகமில்லை. நீ உதவாக்கரை, உன்னால் எந்தக் காரியமும் ஆகாது” என்று குறை சொல்லிக் கொண்டே இருந்தால் அவர் அப்படியே ஆகி விடுவார்.

இப்போது ஆண்களுக்கான ரகசியம்:

கணவன், மனைவியின் மன உணர்ச்சிகளோடு விளையாடக் கூடாது. மனைவி தன் சகோதரன், தாய் அல்லது குடும்பத்தினரைப் பற்றிக் குறை சொல்லி மட்டமாகச் சொல்லும் போது, நீயும் அதில் சேர்ந்து ஆமாம், உன் சகோதரன் சரியில்லை…., தாய் அப்படித்தான்…. குடும்பமே…….” என்று சொன்னால் அவள் உன் மீது திரும்பி விடுவாள். தன் குடும்பத்தினரை விட்டு விட்டு உன்னைப் பற்றிக் குறை கூறுவாள். புகார் சொல்லுவாள். சக்கரத்தை அப்படியே திருப்பி சுற்றி விடுவாள்.

மனைவி யாத்திரைக்கோ, சினிமாவுக்கோ, இல்லை கடைவீதிக்கோ செல்ல விரும்பினால், அதை ஒத்துக் கொண்டு உங்கள் வங்கி க்ரெடிட் கார்டையும் அவளிடம் கொடுங்கள். எனவே, கணவன் மனைவியின் மன உணர்ச்சியோடு விளையாடாமல் இருந்தால் எல்லாமே நலமாக இருக்கும்.

இப்போது கணவன் மனைவி இருவருக்கும்:

மற்றவரிடம் அவர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நீருபிக்கச் சொல்லாதீர்கள். அன்புக்கு அத்தாட்சி கேட்க வேண்டாம். “நீ, உண்மையில் என் மீது அன்பு வைத்திருக்கிறாயா?” என்று கேட்க வேண்டாம். ஒருவர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை நிரூபிக்கும் பளுவை அவருக்குக் கொடுக்கக் கூடாது. அவர் உங்கள் மீது குறைவாக அன்பு செலுத்துவதாக நீங்கள் நினைத்தால் “என் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்?” என்று கேளுங்கள். “உங்களுக்கு என் மீது அன்பே இல்லை” என்று சொல்ல வேண்டாம்.-ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்
===========================================
மேலும் சில வரிகள் :


கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!


No comments:

Post a Comment