முதலுதவி சிகிச்சை -ஆபத்தான நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை



முதலுதவியின் முக்கியத்துவம்:
முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அதற்கென பரிந்துரைக்கப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு அவசர உடனடி உதவி ஆகும். 
முதலுதவி வழங்குபவர் ஒரு மருத்துவராகவோ அல்லது மருத்துவர் அல்லாதவராகவோ இருக்கலாம். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்டவரின் நோயின் தன்மையை உணர்ந்து அதற்கு உரிய சரியான உதவிகளை வழங்கக்கூடியவராகவும், பதற்றம் அடையாதவராகவும் இருத்தல் அவசியம்.
தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, 
விளையாட்டு, வாகன விபத்துகள், சண்டைகள், தவறி விழுதல், இருதய உபாதைகள், மாசு நிறைந்த சூழ்நிலையில் வாழ்தல், இரசாயன கலவைகளின் பாவனை, தவறான மின் பாவனை, கட்டுப் பாடற்ற நெருப்பு பாவனை, இயற்கையின் சீற்றங்கள் என்பவற்றால்  எதிர்பாராத விதமாக திடீரென ஒருவரோ அல்லது பலரோ ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றார்கள். 
இவர்கள் எமது உறவினர்களாகவோ, நண்பர்களாவோ அல்லது அறியாத ஒருவராகவோ இருக்கலாம். அவர்களுக்கு தகுந்த முதலுதவி அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாம் எல்லோரும் தகுதிவாய்ந்த முதலுதவியாளராக இருந்தால் மட்டுமே எம்மால் அவர்களைக் காப்பற்ற முடியும். அவர்கள் மீது இருக்கும் பாசத்தால் அல்லது அவர்கள் படும் கஸ்டங்களை சகிக்க முடியாது இரக்கப்பட்டு அவர்களைக் காப்பாற்றுவதாக எண்ணி நாம் தவறான முறையில் முதலுதவி வழங்கினால் அவர்கள் மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.
எனவே நாம் ஒவ்வொருவரும், ஆபத்தாக நோய்வாய்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியான முறையில் முதலுதவி அளிக்க கற்றுக் கொள்ளல் அவசியமாகின்றது. இது போன்ற முதலுதவி பயிற்சிகள் Red Cross, St.John Ambulance, போன்ற பல நிறுவகனங்களால் எல்லா நாடுகளிலும் பயிற்றப்படுகின்றன.  
முதலுதவி சிகிச்சை முறைகள் சூழ்நிலக்கேற்ப, பாதிக்கப்பட்டவரின் நிலைமைக்கேற்ப வித்தியாசமாக அமையும்.
சில பொதுவான விதி முறைகளை எல்லோரும் அறிந்து கொள்ளும் நோக்கோடு கீழே பகிர்ந்து கொள்கின்றோம்.
முதலுதவியின் குறிக்கோள்
1.    உயிரைப் பாதுகாத்தல்:
2.    நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்
3.    சீக்கிரத்தில குணமளிக்க முன் ஏற்பாடு செய்தல்.
முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
1.    முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
2.    சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
3.    நோயாளருக்கு உதவியளித்தல்.
அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
1.    முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
2.    முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
3.    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
4.    அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
5.    பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
6.    பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
7.    முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
8.    அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
9.    பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
10.    பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலுதவி கருவிப் பெட்டி (First aid kit) என்பது துணைக்கலப் பொருட்களையும், கருவிகளையும் சேகரித்து வைத்து முதலுதவி அளிப்பதற்குப் பயன்படுவது ஆகும்.
[1]. முதலுதவி கருவிப் பெட்டிகள் என்பது யார் என்ன காரணத்திற்காக தயாரிக்கின்றனர் என்பதைப் பொறுத்து வேறுபட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அது அரசாங்கம் அல்லது நிறுவனங்களுக்கிடையேயான வேறுபட்ட அறிவுரைகள் அல்லது சட்டங்களைப் பொறுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபடலாம்.
உங்கள் பணியிடங்களில் தேவைப்படும் முதலுதவி வசதிகளின் வகைகள் பின்வருவனவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன:
•    நீங்கள் வாழும் மாநிலம் அல்லது பிரதேசத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்;
•    நீங்கள் பணிபுரியும் தொழில்துறையின் வகை (சுரங்கத்தொழில் போன்ற தொழில்துறைகள் தனிச்சிறப்பான வழிமுறைகளுடன் விவரிக்கப்பட்ட குறிப்பிட்ட தொழில்துறை விதிமுறைகளைக் கொண்டிருக்கலாம்);
•    உங்கள் பணியிடங்களில் விளையக்கூடிய தீங்குகளின் வகை;
•    உங்கள் பணியிடங்களில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை;
•    உங்கள் பணியிடம் பரவியிருக்கின்ற வேறுபட்ட இடங்களின் எண்ணிக்கை;
•    அருகாமையில் கிடைக்கும் உள்ளூர் சேவைகள் (மருத்துவர்கள், மருத்துவமனை, முதலுதவி வண்டி).
முதலுதவி வசதி உங்கள் பணியிடங்களின் தேவைகளை கண்டிப்பாக நிறைவுச் செய்ய வேண்டும். வசதிகள் என்பது முதலுதவி கருவித் தொகுப்புகளை அல்லது ஓய்வறைகளை உள்ளடக்கியது.
உங்கள் பணியிடங்கள் சுழற்சி பணிமுறைமாற்றங்களில் இயங்கினால், ஒவ்வொரு பணிமுறைமாற்றங்களிலும் ஒரு முதலுதவி தெரிந்த நபரை நியமித்திருக்க வேண்டும். உங்கள் பணியிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முதலுதவி நியமனங்கள் கொண்டிருப்பது பணியிடத்தில் ஏதாவது ஒரு பணி முறைமாற்றத்தின்போது ஒருவர் வரவில்லை என்றாலும் மற்றொருவர் பார்த்துக்கொள்ள முடிவதும் மிகச்சிறந்ததே.
பொதுவாக உள்ளடக்கமாக கட்டுத் துணிகள், CPR (இதய இயக்க மீட்பு சுவாசம்) இயக்குவதற்கான சுவாசத் தடைகள் போன்ற இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் சில மருந்துகளையும் கொண்டிருக்கலாம்.
மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். 
இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.
பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மயக்கம் ஏற்படுதல
அறிகுறிகள்
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
1.    தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
2.    சோர்வு
3.    வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
4.    தோல் வெளுத்துக் காணப்படுதல்.
முதலுதவி
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
1.    முன்புறமாக சாய வேண்டும்
2.    தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
1.    பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
2.    இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
3.    குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
வலிப்பு
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.
அறிகுறிகள்
1.    உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
2.    நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
3.    முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
4.    சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
முதலுதவி
1.    பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
2.    நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
3.    எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
4.    மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
5.    மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
6.    பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
வெப்ப நோய்கள்
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
1.    வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
2.    முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
3.    உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்
4.    உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
5.    எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
6.    மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration - நினைவிழந்தவர் வாயில் முதலுதவியாளர் வாயை வைத்து ஊதும், மற்றும் Chest compressions - நெஞ்சை அமத்தி மூச்செடுக்கச் செய்யும் CPR-Cardio Pulmonary Resuscitation - செயற்கச் சுவாச முதலுதவிச் சிகிச்சை மிக மிக அவசியம். 
ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம் 
1.  இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது  இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது 
2.  உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது 
3.  விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது
4.  தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது
5.  அதிர்ச்சியின் போது ( in a state of shock)
7.  வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock) 
இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் ) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.
ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல் உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

நினைவிருக்கிறதா என உறுதி செய்தல் 
சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion),
மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்
உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. 
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது;
( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்) 
ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது. 
இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும். 
CPR என்பது ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம். 
மூச்சுக்குழல் பாதையை சீர்செய்தல்:நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். 
இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாக்கு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)
இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும். 
மூன்றாவதாக-Circulation.
ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதன்னிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. 
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம். 
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.
Chest Compressions எப்படி அளிப்பது: விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது. 
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.
வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி
1.  காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
2.  இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3.  காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
4.  ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
1.  வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
2.  இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி 
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

தீக்காயங்களுக்கான முதலுதவி
1.  ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
2.  தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
3.  தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
4.  தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
5.  குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்

மின்சாரபாதிப்புக்கான முதலுதவி
1.  ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
2.  குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறலுக்கான முதலுதவி

பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,
பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்குதலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் வைத்தியரிடம் எடுத்துச் செல்லவும்.
பெரிய குழந்தைகளுக்கு
உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

தண்ணீரில் முழ்கினால்...

ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும்.  அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

நன்றி:திரு. திருமதி.  முகுந்தன் - சிவகௌரி

No comments:

Post a Comment