விஸ்வநாதன் ஆனந்த்

ஒரு மயிரிழையில் ஒரு விண்ணுயரம்



ஒரு புள்ளி வித்தியாசத்தில் உலகப் புகழும், செஸ் உலக 5 வது சாம்பியன்சிப்பும் சுமார் 8கோடி ரூபாயும் வென்ற ஒரு தமிழனுக்கு இது ஒரு மரியாதைப் பதிவு.

பாரத ரத்னா தருவதில் சிக்கலை ஏற்படுத்திய கபில்சிபல் போன்றவர்க்கு இது பெருத்த அடி. இனி கொடுத்துவிடுவார்கள்.ஒன்றுமில்லா ஐ.பி.எல் சூதாட்டப் போட்டியில் வென்றதற்கே கல்கத்தா நகரை கலக்கி உள்ளார்கள் ஷா ருக் கானும், ஜுஹி சாவ்லாவும், உஷா உதூப்பும், மம்தா பானர்ஜியும், சரியாக விளையாடாத யூசுப் பதான் கூட வெற்றிக் கோப்பையை தூக்கி பிடித்துக் கொண்டாடுகிறார் சற்றும் பொருத்தமில்லாமலே அந்த ஹிமாச்சல் பிரதேச விக்கெட் கீப்பர் மன்வீந்தர் பிஸ்லாவின் ஒரு நாள் சத்தமில்லாத அடி அந்த வெற்றியை அவர்க்கு குவித்து விட்டது அதிலும் கபில்தேவுக்கு தரவேண்டிய 1.5 கோடி பண முடிப்பை தராமல் விட்டு விட்டதாக தெரிவிக்கின்றன செய்திகள்.

இந்நிலையில் ஒரு தமிழன் உலக அளவில் சதுரங்க ஆட்டத்தின் 5 ஆம் முறையாக முதல்வனாக வென்றிருப்பது உண்மையிலேயே தமிழராகிய நமக்கெல்லாம் பெருமைதான். நாசாவில் ஔவைப் பிராட்டியின் வாசகம்: கற்றது கையளவு கல்லாதாது… போல இது ஒரு மகத்தான தமிழ் சொல்லும் தமிழன் பேர் சொல்லும் சாதனைதான். ஆனந்த் விஸ்வநாதன் உலக குடிமகனாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார் இதில் இரட்டைக் குடிமகன் உரிமை பெற்றிருந்தால் என்ன தவறு? என்பதை நிருபித்து விட்டார். அவர் பெற்றோர் இன்னும் சென்னை மண்ணில் தமிழ் மண்ணில் வாழ்ந்து வருகையில் அவர் ஸ்விஸ் குடியுரிமை பெற்றிருந்த போதும் இந்தியர் என்றே குறிப்பிடப்படுகிறார் என்பதை நமது நாடும் அரசுகளும் ஆள்பவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சதுரங்கம் அல்லது செஸ் ஆட்டம் நிறைய பேருக்குத் தெரியாத ஆட்டம். சற்று கடினமானதுகூட. வி.ஆனந்த் அப்படிப்பட்ட செஸ் ஆட்டத்தில் உலக அளவில்: 12+4 ஆட்டங்கள் இஸ்ரேல் ஆட்டக்காரர் போரிஸ் ஜெல்பேண்ட் உடன் ஆடி மொத்தம் 8.5 புள்ளிகள் பெற்று ஜெல்பேண்டை விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்றதால் (தோற்றவருடையது 7.5 புள்ளிகள் என்பதும் அவர் உலக தர வரிசையில் 17 ஆம் இடத்தில் உள்ளவர் இவர் முதலாம் இடத்தில் உள்ளவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.) இவருக்கு இவ்வளவு புகழ் மாலைகளும். 2 ஆட்டம் வெற்றி ஒரு ஆட்டம் தோல்வி மற்ற 13 ஆட்டங்களும் சமன் செய்து இவ்வெற்றி பெற்றிருப்பதில் உள்ள சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.

சதுரங்கம் ஆடுவோர்க்கு உடல், மனம், மூளை எல்லாம் ஒருங்கிணைந்து செயல் படவேண்டியதும் எப்போதும் புத்துணர்வோடு இருக்கவேண்டியதும் அவசியமானதாகும். சற்று உடல் தளர்ந்து சோர்வடைந்திருந்தால் கூட இந்த ஆட்டம் ஆட முடிவதில்லை. உடல் எனும் கருவி, சாதனம், உபகரணம், எந்திரம் எவ்வளவு செல்லமுடியுமோ அந்த அளவு செலுத்தி மனிதன் தம் வாழ்வு முடிவதற்குள் சாதிக்கப் பார்க்கிறான் அதில் இந்த செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்தின் பயணம் தொடர்வது இந்தியர் ஒவ்வொருவர்க்கும் பெருமைப் படக் கூடியதே.

இந்த விளையாட்டில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடும் வயது வித்தியாசமும் பெரிதும் பார்ப்பதற்கில்லை. ஒரு விளையாட்டிலேயே கூட நாம் எல்லாம் களைத்து விடுமளவு மூளைக்கு அதிக படியான வேலை. அப்படி இருக்க இந்த 40க்கும் மேற்பட்ட வயதிலும் இளைஞராகவே காட்சி அளித்துக் கொண்டு உலக அரங்கில் தமது வெற்றிக் கொடியை மேன் மேலும் இவர் நாட்டி வருவது உண்மையிலேயே மனித குலத்திலேயே இவரின் சகிப்புத்தன்மைக்கும் எந்த சமயத்திலும் மூளையை செயல் படவைக்கும் ஆற்றலும், முடிவு எடுக்கும் வல்லமையும் அதிக திறனும் பெற்றவர் என்பதைக் காட்டுகிறது. இவர் பிறந்த சாதிக்காக இவரை பின்னுக்குத் தள்ளிப் பேசக்கூடாது. அப்படிப் பேசுவது நம்மை நாமே கொச்சைப் படுத்திக் கொள்வதாகும். அவருக்கு கற்றுக் கொடுத்த அவரின் தாய் சுசீலா அம்மையாரையும், தற்போது உறுதுணையாக இருந்து வரும் மனைவி அருணா அவர்களையும் தந்தை விஸ்வநாத அய்யர் மற்றும் அவர் தம் குழந்தைகள் அடங்கிய குடும்பத்தார் அனைவருக்கும் எமது அன்பும் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தானது.

இவரின் வெற்றிகள் மேன்மேலும் தொடர.........................

நன்றி:
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment